திங்கள், 3 செப்டம்பர், 2012

சமூகப்பாதுகாப்பு

எழுதியே (திட்டியே) ஆக வேண்டிய நிறைய விசயங்கள் காத்திருப்பில் உள்ளன. விரைவில் எழுதனும். அதுக்கு முன்னதாக ஒரு முன்னோட்டம். வெளி நாடுகளில்  இருப்பதாக சிலாகிக்கப்படுகிற இந்தியாவில் இருக்கிறதாவென சந்தேகப்படுகிற ஒன்று- சமூகப்பாதுகாப்பு. தாம்பரம் சிறுமலர் ஸ்ருதியும் கஸ்தூரிபா மருத்துவமனையில் முகமெல்லாம் குதறப்பட்டு (இந்த வார்த்தைகளுக்காக அந்த சின்ன உயிர் என்னையும் மன்னிப்பதாக; எப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது) பெயரிடப்படும் முன்னே இறந்த சின்னஞ்சிறு மலர் இவர்களெல்லாம் நம் சமுதாயத்தின் மனசாட்சி. செத்து விட்ட ஒன்று. எத்தனை எத்தனை அலட்சியாமான உயிரிழப்புகள்? திடீரென கார்க் கதவு திறக்கப்பட்டதால் அருகில் வண்டியில் தாத்தாவுடன் போன குழந்த அடிபட்டு இறந்தது. ஆழ்குழாய்க் கிணறுகளில் அடிக்கடி குழந்தைகள் மாட்டி இறக்கின்றன. என்ன மாதிரியான தேசத்தில் நாம் வசிக்கிறோம்? ஒரு மனிதன் எத்தனை எத்தனை வேதனைகளை அனுபவிப்பது?மழை பொய்த்து கடன் நெருக்கியதில் மூச்சடக்கி இறக்கிறான் விவசாயி; மணலையும் தண்ணீரையும் மண்ணையும் குப்பையயும் கல்லையும் திருடுகிறார்கள்; அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் அப்பட்டமாக கொள்ளையடிக்கிறார்கள்; செய்த வேலைக்கு கூலியை கேட்டால் சுட்டுக்கொல்கிறார்கள்; (ரெட்டணை தமிழ் நாடு); வாழுமிடத்தை ஏனடா கெடுக்குரீர்களென்றால் அவன் தேசத்துக்கெதிராக போர் தொடுத்தவன் ஆகிறான்; என்ன உலகமடா இது?  கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு போனால் ஒன்றும் பிரச்சனையில்லை; எதையாவது கேட்டால், பார்த்தால், படித்தால் கொஞ்சமாவது கோபம் வருகிறது; எதுவும் செய்யாமல் இருப்பது மனதுக்கு பெரும் உறுத்தலாக இருக்கிறது. 

செவ்வாய், 3 ஜூலை, 2012

கடைசியாக இருந்த இருநூறு ரூபாயையும்
ஏடிஎம் மிலிருந்து
உருவி விட்ட பிறகு_
நம்பிக்கையுடன் வழியனுப்பிய உன்முகம்
புதிய விடியலாய்
இந்தப் பின்னரவில்
என்னை வழி நடத்துகிறது.

வியாழன், 3 மே, 2012

புரட்சி

ஒரே ஒரு நாள் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில் நின்று கிழக்கேயும் மேற்கேயும் பாருங்கள். வானுயர வளர்ந்து வரும் கட்டிடங்கள் அங்கே கரையோர குடிசைகளை நதியை நோக்கி நெருக்கித்தள்ளுவதைப் பாருங்கள். ஒரு அளவுக்குத்தான் நெருக்க முடியும். பொறுக்க முடியாத கட்டம் வரும்போது அந்த மக்கள் அருகிலுள்ள நெடிதுயர்ந்த கட்டிடங்களை சூறையாடுவார்கள். அதன் பெயரும் புரட்சிதான். இன்னுமொரு நாள் பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தம் வலப்புறம் உள்ள எளியவர்களின் குடியிருப்புப்பக்கம் போய்ப் பாருங்கள். நெருக்கி வரும் மென்மொழி நிறுவன அடுக்குமாடி கட்டிடங்களின் இடையே இன்னும் எத்தனை நாள் அவர்களை விட்டு வைப்பார்கள்? அவர்கள் வீடுகளின் மீது வைக்கப்படும் கைகளை அவர்கள் அறுத்தெறியப்போவதன் பெயரும் புரட்சிதான். வேறொரு நாள் புழுக்கள் நெளியும் காசிமேடு மீன்பிடித்துறைமுக மீனங்காடி போங்கள். அங்கே குவியும் நகரத்துக் கழிவுகளை ஒரு நாளில் திருப்பி நகரத்தின் உள்ளேயே வீசி எறிவார்கள். அதற்குப் பெயரும் புரட்சிதான். மற்றொரு நாள் தஞ்சையின் கடைசி நெல்வயலில் மனை கட்ட அளவைக்கல் போடும் போது சென்னையில் அரிசி கிடைக்காமல் ஒரு குடும்பம் தெருவில் இறங்கப்போவதும் புரட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகள் நடக்கும் போது இன்றைய ஓட்டுக்கலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் உண்மையான கம்யூனிஸ்டுகளின் இயக்கங்கள் வரை இணைந்து புரட்சிகளை முன்னெடுக்கலாம்; அப்போது இங்கேயும் கம்யூனிசம் மலரும். அந்த நாட்களை நோக்கி இந்திய, பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபவெறி; மக்களின் பொருள் குவிக்கும் பேராசை இவையெல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகின்றன. தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டிக்கொண்டிருப்பதையறியாமல்.

புதன், 2 மே, 2012

மறைக்காத கதவு

அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருக்கும்
என் குறுகுறுப்பின் மென்வலியை அறிந்தவளாய்
கதவைத் திறக்கிறாள் - தூக்கத்தைக் கொன்றபடி.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஜம்புவின் மரணம்


இன்று உண்மையில் மிகவும் வருத்தமான நாள். அப்பாவின் நாய் ஜம்பு இறந்து விட்டது. விஷம் கொடுக்கப்பட்டு கொன்று விட்டதாக சொல்கிறார்கள். ஊரில் அப்பாவுக்கு இருந்த ஒரே துணைதான் இந்த ஜம்பு. கொஞ்ச மாதங்கள் முன்பு அப்பா இந்த நாயைக் குட்டியாக எடுத்து வரும் போது வீட்டில் மிகப்பெரும் எதிர்ப்பு. நானும் அம்மாவும் பழைய நாயான ராமுவின் நிலையைக் கருத்தில் கொண்டு வேண்டவே வேண்டாம் என்று சொன்னோம். இதற்கு முன்பு நான் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் போது (சுமார் இருபது வருடங்கள் முன்பு)  வீட்டில் வளர்த்த நாய்தான் ராமு. ராமு மிகவும் நாசுக்கான நாயாகத்தான் இருந்தது. பின் போகப்போக மற்ற தெரு நாய்களைப்போல சகலமும் செய்தது. ஒரு நாளில் ராமுவுக்கு வெறி பிடித்து விட்டது. சிலரைக் கடித்தும் விட்டது. நாயைக் கொல்வதில் நிபுணத்துவம் பெற்ற செல்வம் சித்தப்பாவுக்கு காசு கொடுத்து கொல்லச் சொல்லி விட்டோம். உலக்கையில் அடிவாங்கிக் கொண்டு நானும் தங்கையும் வீட்டுக்குள் இருந்த போது வாசல் படியில் வந்து ரத்தம் கக்கிக் கதறிய ராமுவைக் கம்பியைக் கட்டி இழுத்துக் கொண்டு போனார்கள். எங்களின் பசு மாட்டை அப்பா விற்று விட்ட சில நாட்களில் ஒரு கட்டை வண்டியை இழுக்க அது பழக்கப்படுத்தப்படும் கொடுமையான காட்சியைப் பார்த்து விட்டு நானும் தங்கையும் கதறியதை விடவும் ராமுவுக்காக அதிகம் கதறினோம். ராமு வீட்டு வாசல் படியில் ரத்தம் கக்கியபடி பார்த்த பார்வை இன்றும் கண்ணில் நீரை வரவழைக்கும் படியாக நிலைத்து விட்டது. அதன் பிறகு நாய் பூனை எதுவும் வீட்டில் வளர்க்கவில்லை. இப்போது ஜம்பு தான்.
ஜம்புவுக்கு அப்பாவோ அம்மாவோ பெயர் வைத்திருக்கக் கூடும். அதற்கு அர்த்தம் இருக்கிறது. நான் இன்னும் சின்னப் பிள்ளையாக இருந்த நாட்களில் பள்ளி செல்லாத நாட்களில் மங்கலான நினைவுகளோடு வீட்டில் ஒரு ஜம்பு இருந்தது. அப்பாயி வளர்த்த நாய் அது. ஒரு முறை தொட்டியம் வெங்கடேசா தியேட்டரில் எதோ ஒரு படம் பார்க்க அப்பாயி உடன் பஸ்ஸில் போனோம். ஜம்பு பஸ்ஸை பின் தொடார்ந்து தியேட்டருக்கு வந்து விட்டது. படம் பார்த்து மிடிக்கும் வரை தியேட்டர் வாசலில் இருந்தது. நாங்கள் மறூபடியும் லதா பஸ்ஸில் ஏறி ஊர் வந்தோம். எங்களுக்கு முன்னதாக வீடு வந்து விட்டது ஜம்பு. மிகவும் அறிவான நாய் என்று பெயர் பெற்றது. மிகவும் வயதாகி தோலெல்லாம் சுருங்கிப் போன ஜம்பு நினைவில் இருக்கிறது. சாகும் தருவாயில் வீட்டில் சாகாமல் எங்கேயோ ஓடி மறைந்து விட்டதாக அம்மா இன்னமும் சொல்வார்கள்.

இந்த ஜம்புவும் மிகவும் அறிவான நாய்தான். எந்த சந்தோசங்களையும் அனுபவிக்க விரும்பாத வறட்டுத்தனமான விவசாயியான என் அப்பவின் ஓட்டை டி வி எஸ் 50 ல் முன்புறம் ஒரு குழந்தையைப் போல உட்கார்ந்து போகும். நான் ஊருக்கு போயிருக்கிற நாட்களில் என்னிடம் மிகுந்த பிரியத்துடன் வாலை ஆட்டும். எனக்கென்னவோ என் அப்பா என்னிடம் நலம் விசாரிப்பதைப் போல இருக்கும். ஜம்புவுக்கு அசைவம் இல்லாமல் உணவு இறங்காதாம். முட்டை கூட சாப்பிடாத (அதை வாங்கி சமைத்து சாப்பிடுகிற நேரத்தில் வயலில் எதாவது வேலை பார்க்கலாம் என்கிற அளவுக்கு பிஸியானவர்) அப்பா ஜம்புவுக்கு அடிக்கடி முட்டையை வறுத்துக் கொடுத்து வளர்த்திருக்கிறார். நேற்று கூட கருவாடு வாங்கி வந்திருக்கிறார். ஜம்பு என்ற பெயர் என் தங்கை மகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவளுக்கும் ஜம்புவைப் பிடிக்கும். அவள் ஊரில் இருக்கிற இந்த நாளில் ஜம்பு இறந்து விடவே மிகவும் அழுதிருக்கிறாள். என் அப்பவும் அழுததாகச் சொன்னார்கள். சித்தி வீரம்மாவைத்தவிர யாருடைய சாவிலும் அழாத எனக்கு ஜம்புவின் இறப்பு கண்ணீரை வரவழைத்து விட்டது. மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. இரவில் தண்ணீர் பாய்ச்சப் போகும் நேரங்களில் ஜம்பு அப்பாவுடன் போகும். ஜம்பு குட்டியாக இருந்த போது பல முறை தெரு நாய்களால் குதறப்பட்டு இருக்கிறது. அப்பா அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போய் காப்பாற்றி வைத்தார். சங்கிலி மாமா ஜம்புவைக் குட்டியாக பார்த்த போது கேட்டார். கொடுத்திருக்கலாம். அங்கே இருந்தாலாவது உயிரோடு இருந்திருக்குமோ என்னவோ.
யார் யாரோ என்னென்னவோ கஷ்டப்படுகிறார்கள். மக்கள் கொடும் துயர்களையெல்லாம் அனுபவிக்கிறார்கள். கொல்லப் படுகிறார்கள். வதைக்கப் படுகிறார்கள். இப்படியான சூழலில் ஒரு நாயின் மரணத்துக்கு இரங்கல் குறிப்பு எழுதுவதா என்று எனக்கு கேள்வி இல்லை. ஜம்பு என் அப்பாவின் நண்பன். ஜம்பு எனக்கு உறவு. ஜம்பு எங்கள் வீட்டை நம்பி வந்தவன். ஜம்பு எங்களிடம் பிரியம் காட்டியவன். ஜம்புவின் உடலை இன்று எரித்து விட்டார்கள். ஜம்புவின் புகைப்படம் ஒன்று கூட இல்லை. ஜம்பு-என்னென்றும் என் நினைவில் நிற்பான்.

திங்கள், 12 மார்ச், 2012

நீ நதி

நீ நதி!!!
என் வாழ்வின் கரைகள் எங்கும்
வாச மலர்களை
மலர்த்திப் போகிறாய்
ஜோதி. 

வியாழன், 12 ஜனவரி, 2012

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கரங்களை இழந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும்
இனிக்கட்டும் செங்கரும்பு.

கணவன்களை இழந்த ஈழத்துப் பெண்களுக்கும்
பொழியட்டும் புது மஞ்சள்

வயல்களை இழந்த ஈழத்து விவசாயிகளுக்கும்
பொங்கட்டும் புத்தரிசி

உள்ளோருக்கும், இல்லாருக்கும் எல்லாருக்கும் பொதுவென
முகிழட்டும் தைப்பொங்கல்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.