ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

ஒரு குழந்தை இறக்கிறது


ஒரு குழந்தை இறக்கிறது
குறி இதழ் 21 இல் வெளியானது

முன்னொரு காலத்தில் ஒரு குழந்தை இருந்தது.
ஆலை விபத்தில்
விழிகள் திறந்திருந்தபடி
இறந்து போனது அது…

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
பிறக்கும் முன்பாகவே
தாயின் வயிற்றில் இருந்து
வாளால் அறுத்து எடுக்கப்பட்டு
தீயிலிடப்பட்டு
இறந்து போனது.

அதே குழந்தை
பின்னொரு நாளில்
கடல்சூழ் நாட்டில்
வேதிக்குண்டுகள் வீசப்பட்டு
இறந்து போனது.

அதே குழந்தை 
இன்னொருமுறை இறந்துபோகும் முன்
கரியாகிக் கிடக்கும் தன் தமயனை
எரிந்தபடியே நின்றுபார்த்தது.

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
கடற்கரை மணலில் முகம் புதைந்தபடி
இறந்து போனது

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
சகோதரியின் வன்கலவியின் போது
கழுத்தறுபட்டு இறந்து போனது.

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
நெஞ்சில் துப்பாக்கி குண்டு வாங்கி
கால்மடிந்தபடிக்கு
இறந்து போனது

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
சகோதரிக்கு தன் மூச்சை வழங்கி விட்டு
நச்சுக்குண்டுக்கு
இறந்து போனது

அதே குழந்தை-
யாரோ ஒருவருடைய யுத்தத்தால்…
யாரோ ஒருவருடைய சாதி வெறியால்…
யாரோ ஒருவருடைய மதவெறியால்…
யாரோ ஒருவருடைய வல்லரசுக் கனவால்..
இன்னும்-
என்னென்னவோ வழிகளிலெல்லாம்
இறந்து கொண்டிருக்கிறது.

யாராவது தேவதூதர்கள் வந்து
இந்த உலகை
குழந்தைகள் வாழத்தகுந்த உலகாக
ஆசிர்வதிக்கும் வரை
அந்தக் குழந்தை
இறந்து கொண்டிருக்கும்.

உயிராலானது இவ்வுலகு-சூழலியல் தொடர் கட்டுரைகள்


குறி இதழ் 22 இல் வெளியான கட்டுரை
உயிராலானது இவ்வுலகு-சூழலியல் தொடர் கட்டுரைகள்
மணி ஜெயப்பிரகாஷ்வேல்
நமது புவி இருக்கக்கூடிய சூரியக் குடும்பத்தில் புவியோடு சேர்த்து 8 பெரிய கோள்கள் உள்ளன. 500க்கும் மெற்பட்ட துணைக்கோள்களும், 70 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட சிறுகோள்களும் உடைய நமது சூரியக்குடும்பம் சூரியனைப் போன்ற 400 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நட்சந்த்திரங்களையும் 100 பில்லியன் கோள்களையும் உள்ளடக்கிய பால்வீதி (Milky Way) நட்சத்திர மண்டலத்தின் (Galaxy) ஒரு அங்கம் ஆகும். பால்வீதியைப் போல சுமார் 100 பில்லியன்  நட்சத்திர மண்டலங்கள் (Galaxy) விரவிக்கிடக்கின்ற பெருவெளிதான் நமது பிரபஞ்சம். ஆனால், நமது மானுடகுலத்தின் தற்கால அறிவுக்கு எட்டியவகையில், உயிரினங்கள் வாழத்தகுந்ததாக நீர்வளம், நிலவளம், வளிவளம் உடைய ஒரே ஒரு அமைப்பு இப்புவி மட்டுமே. அதாவது நம்மை உயிரோடு வைத்திருக்கவும், நாம் உயிரோடு வைத்திருப்பதற்கும் ஒரே ஒரு புவிதான் உள்ளது.

கடையில் போய்க் காசு கொடுத்தால் பொருள் கிடைப்பதைப் போல அவ்வளவு எளிதாக நமக்கு இந்தப் புவி கிடைத்துவிடவில்லை. பெருவெடிப்பு (Big Bang) எனும் வானியல் நிகழ்வின் மூலமாக  சுமார் 1500 கோடி ஆண்டுகள் முன்பாக நமது பால்வீதி நட்சத்திர மண்டலம் தோன்றியது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 460 கோடு ஆண்டுகள் முன்னதாக சூரியக்குடும்பம் மற்றும் அதில் காணப்படும் கோள்களும் பால்வீதியில் உருவாகின என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சூரியக்குடும்பத்தின் முன்வரிசைக் கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் போன்றவற்றின் உட்புறம் தோன்றிய காலத்தில் இருந்தே திரவநிலையில் உள்ள உலோகங்களாலும் மேற்பரப்பில் கடின பாறைகளாலும் ஆகியுள்ளன. பின்னாலுள்ள வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை வாயுக்கள் நிரம்பியனவாகவும் குளிர் நிரம்பியனவாகவும் உள்ளன. சூரியக்குடும்பம் தோன்றிய முதல் 100 கோடி ஆண்டுகள் வரை புவியின் மேற்பரப்பு மிகவும் அசாத்தியமானதாக இருந்திருக்கிறது. விண்வீழ்கற்களால் (Meteors) தொடர்ச்சியாக தாக்குண்டு வந்தது. ஆரம்பகட்ட புவியில் மழை இல்லை. நீர் இல்லை. ஆக்சிஜன் இல்லை. போகப்போக புவியானது குளிர ஆரம்பித்தது. மேலோடு கொஞ்சம் கொஞ்சமாக இறுக ஆரம்பித்த காரணத்தால் ஹைட்ரஜன் ஹீலியம் போன்ற வாயுக்கள் ஆதார மூலகங்களோடு (elements) இணைந்து பல்வேறு வேதிப்பொருட்களையும் சேர்மங்களையும் உருவாக்கின. புவியின் நடுப்பகுதி (core) இரும்பு மற்றும் நிக்கல் போன்ற மூலகங்களால் (elements) ஆனது.  உள்ளோடு (mantle) கடின உலோகங்களாலும், வெளியோடு (crust) ஏனைய மென்மூலகங்களாலும் ஆனது.
புவியீர்ப்பு விசையின் காரணமாக இப்புவியான இதுநாள் வரை தனது வளிமண்டலத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஆரம்பகட்ட புவியில் ஆக்சிஜன் இல்லையென்பதால் ஆக்சிஜன் மூலம் உண்டாகும் ஓஸோன் வாயுவும் ஒஸோன் படலமும் புவியில் இல்லை. அதனால் சூரியனின் புற-ஊதாக்கதிர்கள் உள்ளிட்ட வலுவான கதிர்கள் நேரடியாக புவியில் பாய்ந்து கணக்கிலடங்கா வேதியியல் வினைகளை ஏற்படுத்தி கலவையான சேர்மங்களையும், உப்புக்களையும் உண்டாக்கின. முதல் 100 கோடி ஆண்டுகளின் இறுதியில் புவியில் மழையின் மூலமாக நீர் தேங்க ஆரம்பித்தது. மழை என்றால் சாதாரணமாக அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்மழையால் புவியில் கடல்கள் உருவாகின. நாமறிந்த வகையில் புவியில் மட்டுமே திரவ நிலையில் நீர் உள்ளது. சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய நீர்தான் புவியை ஒரு உயிர்க்கோளமாக மாற்றியது. சுமார் 350 கோடி ஆண்டுகள் முன்னதாக, புவியின் பெருங்கடல்களில் முதல் உயிரினங்கள் தோன்றின. மின்னல் மற்றும் நீரில் ஏற்பட்ட வேதிவினைகளால் கரிமச்சேர்மங்கள் முதலில் உருவானதாகவும், அதன்மூலமாக நியூக்லிக் அமிலங்கள் எனப்படும் மரபியல்கூறுகள் உருவானதாகவும் நமது ஆய்வுகள் சொல்கின்றன. நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் புரத மூலக்கூறுகள் இணைந்து முதன் முதலாக ஒரு செல் உயிரினங்கள் கடலில் தோன்றின. புவியில் இந்த ஒருசெல் உயிரிகள் தனித்தே பண்ணெடுங்காலம் நிலைத்து வாழ்ந்தன. இன்னமும் வாழ்கின்றன. சுமார் 200 கோடி ஆண்டுகள் முன்பாக இப்புவியில் ஆக்சிஜன் உருவானது. ஒளிச்சேர்க்கை செய்யும் நீலப்பச்சைப்பாசி போன்ற ஒரு செல் உயிரிகளால் ஆக்சிஜன் உருவானது. ஆக்சிஜன், நீர் மற்றும் கரிமச் சேர்மங்கள், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றன. சுமார் 150 கோடி ஆண்டுகள் முன்னதாக பலசெல் உயிர்கள் தோன்றின. நாம் இன்று பார்க்கக்கூடிய அமைப்பிலான தாவரங்களும் விலங்குகளும் சுமார் 50 கோடி ஆண்டுகள் முன்பாக பரிணாமவளர்ச்சியில் உண்டாகின. மனிதன் என்ற உயிர் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக உண்டாகி இருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 460 கோடி ஆண்டுகள் வரலாறு உடைய புவி எனும் உயிர்க்கோளத்தை வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகள் முன்பு தோன்றிய மனிதன் அதிவிரைவாக அழிக்க ஆரம்பித்துள்ளான்.
நமது வளியடுக்குகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இப்படியான வளியடுக்குகள் நமக்கு நேர்வதற்கு சுமார் 450 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. காற்றில் 21 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. இது அதிகமானால் வளியடுக்குகளில் தீப்பற்றி வாயுக்கள் சூடாகி பூமியை விட்டு வெளியேறிவிடும். குறைந்தால் புவியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது. அதே போல நைட்ரஜன் வாயுவானது சுமார் 78% உள்ளது. இந்த மந்தவாயு அதிகமாக இருப்பதால்தான் ஆக்சிஜன் எனும் கடுமையான எரியும்தன்மையுள்ள வாயு வளிமண்டலத்தில் எரியாமல் நிலை பெற்றுள்ளது. இதுதான் ஒருசெல் பலசெல் என எல்லாவிதமான உயிரினங்களிலும் காணப்படும் அணைத்து உயிர்மமூலக்கூறுகளுக்கு ஆதாரப் பொருள். உடலில் அத்தனை உயிர்ச்செயல்களையும் செய்யக்கூடிய நொதிகள், புரதங்கள், வைட்டமின்கள் என எல்லாவற்றிலும் நைட்ரஜனின் மூலக்கூறுகள் உள்ளன. நமது டி.என்.ஏ வில் மரபுத்தகவல்கள் சேகரிக்கும் தன்மையும் நைட்ரஜன் அடங்கிய மூலக்கூறுகளால் தான் சாத்தியமாகிறது.
கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் இவை இல்லாத உயிர்க்கோளம் சாத்தியமில்லை. அனைத்து உயிர்களிலும் உள்ள அனைத்து உயிர்மமூலக்கூறுகளிலும் இந்த மூலகங்கள் பகுதிப்பொருட்களாக உள்ளன. நமது உடலை அல்லது எதோ ஒரு ஒரு செல் உயிரியின் உடலை ஒரு வீட்டுடன் ஒப்பிட்டால், அந்த வீட்டின் செங்கற்களாக இருப்பவை கார்பன் அடங்கிய மூலக்கூறுகள் தான். நமது உயிர்ச்செயல்களுக்குத் தேவையான கார்பன் வளிமண்டலத்தில் இருந்தே ஆதாரமாக பெறப்படுகிறது. கார்பன் அதிகளவில் கார்பன் டை ஆக்ஸைடு வடிவில் சுமார் 0.004% வளிமண்டலத்தில் உள்ளது. வழக்கமாக மாசு என்று சொல்லப்படும் இந்த வாயுவின் புவியியல் மற்றும் உயிரியல் முக்கியத்துவம் இன்றியமையாதது. வளிமண்டலத்திற்குள் நுழையும்  கதிர்வீச்சுடன் கூடிய சூரியனின் வெப்ப ஆற்றலானது புவியின் மேற்பரப்பில் பட்டுத் திரும்பும் போது அதை தக்கவைத்துக் கொள்வது இந்த வாயுதான். அப்படி நடக்காவிட்டால் புவி முழுவதும் துருவப்பகுதிகளைப்போல பனியால் மூடப்பட்டு விடும். புவியின் மேற்பரப்பில் கதகதப்பான தட்பவெப்பம் நிலவுவதற்கு குறைந்த அளவு கார்பன் டை ஆக்ஸைடு வாயு தேவை. உலகின் உணவை உற்பத்தி செய்யும் ஒளிச்சேர்க்கை, அந்த உணவைச் சிதைத்து உயிர்களுக்குத் தேவையான சக்தியை (ATP) உருவாக்கும் வளர்சிதை மாற்றம் ஆகிய இரண்டு இன்றியமையாத உயிர்ச்செயல்களிலும் கார்பன் டை ஆக்ஸைடு தவிர்க்கமுடியாத பங்கு வகிக்கிறது. இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும் போது, வளிமண்டலம் சூடாகிறது. துருவப்பகுதிகளின் பனி உருகி கடல்நீர் மட்டம் உயர்கிறது. வளியடுக்குகளில் வெப்பம் கூடுவதால் பருவகால மாற்றங்கள் நிலைபிறழ்ந்து வெள்ளம், புயல், வறட்சி போன்ற பேரழிவுகள் நிகழ்கின்றன.
இப்படியாக கடந்த 460 கோடி ஆண்டுகளில் நமது புவியில் ஒவ்வொரு மூலங்களும், ஒவ்வொரு அமைப்பும் மிகக் கச்சிதமான அளவில் உருவாக்கப்பட்டு பேணப்பட்டு, ஒரு செல் உயிரினங்கள் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும்  வாழத்தகுந்த உயிர்க்கோளமாக இப்புவி மாறி உள்ளது. இது யாராலும் திடீரென்று உருவாக்கப்படவில்லை. கோடிக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான இயற்கை நிகழ்வுகளால் இப்புவி உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகள் வரலாறு உடைய மனிதகுலத்தின் 300 ஆண்டுகளுக்கு முன்னதான தொழிற்பெருக்கமும், மக்கள்தொகைப்பெருக்கமும், ஆதிக்கவெறியும் புவியின் இருப்பையும் வாழ்வதற்கான சூழலியல் சமநிலையையும் குலைக்க ஆரம்பித்துள்ளன. புவியில் இருக்கும் எந்தவொரு மூலகமும், புவியில் நடக்கும் எந்தவொரு செயலும் தனித்து இல்லை. ஒன்றுக்கொன்று செயலால் பிண்ணிப்பினைந்தவை. அப்துல்ரகுமான் ஒரு கவிதையில் சொல்வார்-சிறு பூவை அசைத்தால் ஒரு நட்சந்திரம் உதிர்ந்து போகும்; தெய்வமே- இனி பூக்களை எப்படித் தொடுவது? என்று. இங்கே எல்லா நிகழ்வுகளும்  தொடர்புடையன. ஒன்றின் சமநிலைக் குறைவு இன்னொன்றைப் பாதிக்கும்.
நிலத்தை இயற்கையாக அமைந்த நிலவியல் தன்மைகளைப் பொறுத்து ஐந்து திணைகளாகப் பகுத்து இலக்கணம் சொன்ன ஒரே நாகரீகம் அநேகமாக தமிழர் நாகரீகமாகத்தான் இருக்க வேண்டும்.இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வின் அத்தனைச் சுவைகளையும் நம் பழந்தமிழ் இலக்கியங்கள் பாடுகின்றன. சமீபத்திய சூழலியல் சீர்கேடுகளையும் அதனால் உயிர்க்கோளத்தில் நிகழும் சூழலியல் சமனிலை திரிபையும் காரணகாரியங்களையும் விளக்கும் பதிவுகள் தமிழில் தற்போது அங்கொன்றும் இங்கொன்றும் வர ஆரம்பித்து உள்ளன. உலகம் முழுமையும் சூழலியல் அறிவானது முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது. இந்தத் தருணத்தை தவறவிட்டால், இதே ரீதியில் சூழலியல் சீர்கேடுகளைத் தொடர்ந்தால் புவியில் மனிதகுல இருப்பே கேள்விக்குறியாகிவிடும். உயிரினங்களின் தோற்றம், வளர்சிதை மாற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகிய அனைத்தையும் புவியின் சூழலியல் அமைப்புகளுடனான அவற்றின் தொடர்புகளுடன் அறிந்து கொள்வது மிக அவசியம். நாம் தற்போது அனைத்து வசதிகளுடன் வாழ்வது முக்கியம் என்றாலும், மனித குலம் புவியில் நீடித்திருப்பது அதி முக்கியமானது. தொடர்ந்து உரையாடுவோம்.
https://issuu.com/kurimagazine/docs/kuri_22_inner

அவர்கள் பயப்படுகிறார்கள்

அவர்கள் ஒரு கவிதைக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு ஓவியத்துக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு இசைப்பாடலுக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு திரைக்காட்சிக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு சிறுகதையின் ஒற்றைப்பத்திக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு கேலிச்சித்திரத்துக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளிக்கு பயப்படுகிறார்கள்;
அவர்கள் மனிதர்கள் நடந்தால் பயப்படுகிறார்கள்;
அவர்கள் மனிதர்கள் கைகோர்த்து நின்றால் பயபப்டுகிறார்கள்;
அவர்கள் ஒரு குழந்தையின் குரலுக்கும் பயப்படுகிறார்கள்;

அவர்கள் பயப்படுகிறார்கள்