என்னைப் பற்றி

எனது புகைப்படம்
திருச்சி மாவட்டம் எம் புத்தூர் எனது சொந்த ஊர். சென்னை பல்கலைக் கழகத்திடம் இருந்து தொழிற்சார் நுண்ணுயிரியல் துறையில் முனைவர் பட்டம் வாங்கியுள்ளேன். ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு உள்ள வேலைக்காக முயன்று வருகிறேன். கொஞ்சம் இலக்கிய நாட்டம் உண்டு. எப்போதாவது படிப்பதும் எழுதுவதும் உண்டு. அதேபோல அவ்வப்போது வெளிவரும் நெய்தல் (http://www.keetru.com/neythal/index.php) என்ற சிற்றிதழின் பொறுப்பாசிரியர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி என்னும் கிராமத்தில் தங்கி உள்ளேன். . 9840529274 jayaprakashvel@rediffmail.com

திங்கள், 12 மார்ச், 2012

நீ நதி

நீ நதி!!!
என் வாழ்வின் கரைகள் எங்கும்
வாச மலர்களை
மலர்த்திப் போகிறாய்
ஜோதி. 

வியாழன், 12 ஜனவரி, 2012

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கரங்களை இழந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும்
இனிக்கட்டும் செங்கரும்பு.

கணவன்களை இழந்த ஈழத்துப் பெண்களுக்கும்
பொழியட்டும் புது மஞ்சள்

வயல்களை இழந்த ஈழத்து விவசாயிகளுக்கும்
பொங்கட்டும் புத்தரிசி

உள்ளோருக்கும், இல்லாருக்கும் எல்லாருக்கும் பொதுவென
முகிழட்டும் தைப்பொங்கல்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

புதன், 23 நவம்பர், 2011

என்னவெல்லாம் நடக்கிறது இந்த நாட்டில்?


என்னவெல்லாம் நடக்கிறது இந்த நாட்டில்?

செய்த்தித்தாள்கள் பார்க்காமல், செய்திகள் கேட்காமல் இருந்தால் ஒழிய ஒருவரால் இந்தியாவில் மன நிம்மதியோடு இருந்து விட முடியாது. எத்தனை எத்தனை கொடுமைகள் நடக்கின்றன? கொஞ்ச நாட்களாக படிக்கவும் எழுதவும் முடியாத அளவுக்கு பணிச்சுமை கூடி விட்டது.  ஆனாலும் சில செய்திகளைப்பற்றிய என் பார்வையை பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

1. பேருந்துக் கட்டணம்- பால் விலை உயர்வு.

என்னைப்போன்ற மாதக் கூலிக்கார குடும்பஸ்தனுக்கு இதைவிடவும் பெரிய சோதனை இருக்க முடியாது. ஜெயலலிதா என்ற சர்வாதிகாரியின் இந்த கடும் விலை உயர்வு சற்றும் நியாயப்படுத்த முடியாதது. இதே கட்டணத்தில் தனியார் பேருந்துகள் லாபமீட்டி வருகையில் அரசுப்போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குகின்றன எனச் சொல்வது ஆடத்தெரியாதவர் வீதி கோணல் என்பதைப் போல உள்ளது. ஏற்கனவே கருணாநிதி என்பவர் நகர்ப்புறங்களில் சொகுசுப் பேருந்துகளை மட்டுமே அலைய விட்டு மறைமுகமாக மக்களை வதக்கினார். இந்த அரசு நேரடியாகவே வதக்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தல்களில் அம்மாவின் நல்லாட்சியால் வென்றதாக சொன்ன அத்தனை அதிமுக வெற்றியாளர்களையும்  கேட்கிறேன் இதுதான் நல்லாட்சியா?

இந்த இரு விலை உயர்வுகளும் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மக்கள் மாதம் ஒரு நூறோ- இருநூறோ அரசுக்கு பிச்சையாக அனுப்பி நிதிச் சுமையை குறைக்க வேண்டுகிறேன். இதுவே தாங்க முடியவில்லை, இன்னும் மின்கட்டணம் எப்படி இருக்குமோ?

2. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள்

இந்தப் போராட்டங்கள் மிகுந்த சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. வேறெந்த மக்கள் பிரச்ச்சனைகளுக்கும் முன்னே வராத கிறித்தவ பாதிரியார்கள் இந்தப் போராட்டத்தில் மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கி இரூக்கிறார்கள். இதை மதத்தோடு சம்பந்தப்படுத்தக் கூடாது என்றும் இது வெளி நாட்டு சக்திகளால் பண உதவி செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை என்று முழுதாக யாரும் சொல்லி விட முடியாது. போராட்டக் குழுவில் யாரும் அணுசக்தி நிபுணர்கள் இருப்பது போலத் தெரியவில்லை. ஆனாலும் என்னவோ பெரிய விஞ்ஞானிகள் அளவுக்கு உலையின் வரைபடம், எரிபொருளின் தன்மை, கழிவுகளின் விபரங்கள் என்று சகட்டு மேனிக்கு அண்ணா ஹஸாரே பாணியில் கேட்டு நிர்ப்பந்திக்கிறார்கள். இவர்கள் சந்தேகம் கேட்பது போல இல்லை. விபரங்களைக் கேட்டு புதிய அணு உலை கட்டுவார்களோ என்று எண்ணுமளவு உள்ளது.

அப்துல் கலாம் இவர்களைப்பார்க்கும் முன்பு “அவர் ஒரு தமிழனாக வந்தால் பார்ப்போம்; அணுசக்தி நிபுணராக வந்தால் பார்க்க மாட்டோம்” என்று சொல்லி விட்டு அவர் போன பின்னாலே அவர் எங்களை வந்து பார்க்கவில்லை என்கிறார்கள். நடுவணரசின் நாரயணசாமி போரட்டத்துக்காப செலவுக் கணக்குகளை கேட்கிறார். இவர்களும் ஒன்றும் பேசவில்லை. நியாயமாகப் பார்த்தால் அவர்கள் காங்கிரசுக் கட்சியின் செலவுக் கணக்குகளையும் வரவின் மூலங்களையும் கேட்டிருக்க வேண்டும்.

இந்த உலை குறித்த பாதுகாப்பு அம்சங்களை அரசு மக்களிடம் மிகத்தெளிவாக விளக்க வேண்டும். ஆனால் இந்தப் போராட்டக் காரர்களுக்கு அதையும் தாண்டிய பயம் இருக்கிறதா அல்லது அவர்கள் வேறு எதையாவது எதிர்பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை.
இந்தியா போன்ற நாடுகளில் மின்தேவை அதிகமாக உள்ளது. பிற மின் உற்பத்தி முறைகள் நமது தேவையை ஈடுகட்டுவதாக இல்லை. பாதுகாப்பான அணு உலைகள் தவிர்க்க முடியாதவை.

3. முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு என்பது வெறும் ஆறு அல்ல. அது தமிழகத்தின் ஆறு மாவட்ட்டங்களது ரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருப்பது. தேனிப் பகுதிகளில் போய்வந்த யாவரும் இதை மறுக்க முடியாது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அதிகம் தமிழகத்தில் உள்ளன. அணையின் உறுதித்தண்மை குறித்த எந்த தொழில் நுட்ப அறிவியல்பூர்வமான விபரங்களையும் கவணத்தில் கொள்ளாமல் கேரளவாதிகள் அணைய இடிப்பதில் குறியாக இருக்கிறார்கள். புதிய அணையில் இருந்து தண்ணீர் தருவோம் என்று எழுதிக் கொடுத்தாலும் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும்.

இத்தனை களேபரங்கள் போதாது DAM999 என்று என்ற படத்தையும் இறக்கி விட்டிருக்கிறார்கள். சீன அணையின் கதை இது என்றும் உலகின் அனைத்து பாதுகாப்பற்ற அணைகளின் மொத்த உருவகம் என்றும் அதன் இயக்குனர் அளந்து விட்டாலும் பெயரில் உள்ள 999 என்பது அது முல்லைப்பெரியார் அணைதான் என்று சொல்லாமல் சொல்கிறது. ஆமாம் அப்படித்தான் என்று நேர்மையாக ஒப்புக் கொள்ள தைரியம் இல்லாதவர்கள் எடுக்கிற படமெல்லாம் நல்ல படமாக இருக்க முடியாது. அரசியல் உள்னோக்கம் கொண்ட படமே இது. இந்தப் படம் கேரளாவில் பிரச்சாரத்துக்கு பயண்படலாம். தமிழ் நாட்டில் வெளியிடப்படாமல் இருப்பது நல்லது.

4. ஏழாம் அறிவு

இது ஒன்றும் நல்ல படம் அல்ல. மற்ற எந்த மசாலாப்படங்களை விடவும் முன்னாடி நிற்பதல்ல. ஒரு சராசரி படம் அவ்வளவே. தமிழனின் இன உணர்வை தட்டி எழுப்புகிறது என்று சொல்கிறார்கள். அப்படி அல்ல. அது படத்தின் வியாபாரத்துக்காக சேர்க்கப்பட்டது. ஒரு நேர்காணலில் உதயநிதியிடம் கேட்கிறார்கள். ஆட்சி மாறிவிட்டதே உங்களின் சினிமாக்கள் இனி எடுபடுமா என்று. அவர் சொல்கிறார். சினிமாவும் அரசியலும் ஒன்று கலக்க தெவையில்லை என்று. வெறும் நாடாள்வது மாட்டுமே அரசியல் என்று புரிந்து கொண்டஒருவரின் படத்தில் இன அரசியல் இருக்கும் என்று சொன்னால் சிரிக்கத்தான் வேண்டும்.
இந்தப் படத்தில் ஒரு நல்ல விசயம் பார்த்தேன். வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கிருமிகள் எப்படியெல்லாம் பரவலாம் என்பதை மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப்பகுதி தனியாக மக்களிடம் பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டும். மிக அருமையான பொது சுகாதார விழிப்புணர்வு அது.

இந்தப் படத்தின் மைய இழையான இறந்த ஒருவரின் திறமைகளை அவரின் சந்ததியினரிடம் தூண்டலாம் என்பது நல்ல கற்பனை. பாராட்டத்தக்கது. மற்றபடி அதில் சொல்லப்படுகிற அறிவியல் விளக்கங்கள் எல்லாம் அபத்தங்களே. ஸ்ருதிஹாஸன் இந்தப் படத்தில் பேசுகிற தமிழின் அழகு இந்தப் படம் தமிழினப்பெருமையை சற்றும் உயர்த்தவில்லை என்பதற்கு ஒரு சான்று. வெறும் வியாபாரத்தந்திரம். அவ்வளவே.


Image from : http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/97/DAM_Poster.jpg/220px-DAM_Poster.jpg

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக்குறைப்புக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிட தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்


பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது கருணைமனுக்களை நிராகரிக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்துவிட்டது. செப்டம்பர் 9 தூக்கு என்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மரண தண்டனைக்கெதிரான விவாதங்களும் போராட்டங்களும் வலுப்பெற்றுள்ளன. இதே காலகட்டத்தில் செங்கோட்டை தாக்குதலுக்காக தண்டிக்கப்பட்ட ஆரிப், பாராளுமன்றத்தாக்குதலில் தண்டிக்கப்பட்டுள்ள அப்சல் குரு ஆகியோரது தண்டனைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக் குறைப்பே வலியுறுத்தப் படுகிறது. உயிரென்றால் எல்லாம் உயிர்தான். பாராளுமன்றத்தாக்குதல் நடத்தியவர்களும் அதை விடுதலைப் போராட்டம் என்றுதான் அறிவிக்கிறார்கள்.
 இப்படியான நிலையில், மரண தண்டனை என்பதை முற்றாக ஒழிக்க வேன்டும் என்பதே என் விருப்பம். அப்சல் குருவின் தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும்; பேரறிவாளனது தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும். கடந்த வருடத்தில் மட்டும் உலகெங்கும் 2000க்கும் அதிகமானோர் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த நாடுகளில் சீனா ஆயிரத்துக்கும் அதிகம் பேரைக் கொன்று முதலிடத்தில் உள்ளது.
 மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டு மனித நேயம் காக்கப்பட வேண்டும் என்பதும் நாம் நமது சமூகத்தின் நாகரீக மேன்மையைக் மெருக்கூட்டவேனும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதும் என் விருப்பம். இதே விருப்பம் உங்களுக்கும் இருந்தால் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக்குறைப்புக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிட தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்.
 இந்த நேரத்தில் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக்குறைப்பை வெறும் இன அபிமானமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த முயற்சியில் முதல் படி இந்த மூவருக்கும் என்று கொள்ளவும். இவர்கள் மூவரும் தற்போது தூக்குக் கயிறு எடுக்கப்படும் நாளை எண்ணிக்கொண்டு உள்ளவர்கள். அப்சல் குரு மற்றும் ஆரிப் ஆகியோரின் கதியும் இதுவே. இவர்கள் இருவரையும் குறித்து தமிழக சட்டமன்றம் பேச முடியாது. முற்றாக மரணதன்டனை ஒழிப்பு என்ற மிகப் பெரிய போராட்டத்தில் முதல் படியாக பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக் குறைப்பை வலியுறுத்துவோம். இந்த ஐவரும் தவறு செய்தார்களா இல்லையா என்ற விவாதத்துக்கு அப்பாற்ப்பட்டு இவர்கள் வாழ விரும்பி தண்டனை ரத்து கோரியவர்கள் என்பதை நினைவில் கொள்க. வாழ விரும்புகிறவனின் உயிரைப்பறிப்பது ஒரு நாகரீக சமூகத்துக்கு அழகல்ல.

உங்கள் என்னமும் இதே போல இருப்பின் அவசியம் விரைவில் தமிழக முதல்வருக்கு ஒரு மடல் அனுப்புங்கள்; முடிந்தால் உடன் ஒரு பத்து பேரின் கையெழுத்தை வாங்கி வலுவுடன் அனுப்புங்கள். தெருவில் இறங்காவிட்டாலும் குறைந்த பட்சம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு இந்த கடிதங்களையாவது அனுப்புவோம்.
 காமெடி காந்தி அண்ணா ஹஸாரேவின் போராட்ட நாடக அலையையும் மீறி இவர்களின் தண்டனைக்குறைப்பை வலுவாக வலியுறுத்துவோம்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

நடிகர் சச்சின் டெண்டுல்கர் பாரத் ரத்னா விருதுக்கு தகுதியானவர்தானா?

நடிகர் சச்சின் டெண்டுல்கர் இரண்டு கோடி ரூபாய் வரிவிலக்கு பெற்றார்

கடந்த வாரம் ஒரு பழைய புதிய வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்தி பார்த்தேன். எந்த பத்திரிக்கை என்று நினைவு இல்லை. சச்சின் டெண்டுல்கர் தான் தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரர் அல்ல என்றும் தொழில்முறையில் தாம் ஒரு நடிகன் என்றும் சொல்லி விளம்பரங்களில் சம்பாதித்த வருமானத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரிவிலக்கு பெற்றுள்ளார். இது பற்றிய ஆங்கிலச் செய்தியின் இணைப்பு இங்கே. http://in.finance.yahoo.com/news/Actor-Sachin-Gets-Tax-Break-yahoofinancein-2344146558.html

பணக்காரர்களின் பண வெறிக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது என்பதற்கு இதைவிடவும் பெரிய எடுத்துக் காட்டு இருந்துவிடமுடியாது. சச்சினை ஒரு கடவுளுக்கு நிகராக இந்திய கிரிக்கெட் பைத்தியங்களும் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பாராட்டுப்பத்திரம் வாசிக்கப் படுகிறது. இத்தனையும் அவரின் கிரிக்கெட் சாதனைகளுக்குத்தான். ஆனால் தனக்கு அடையாளாமான அந்த தொழிலையே மறைத்து தாம் ஒரு தொழில் முறை கிரிக்கெட்காரன் அல்ல என்று பொய் சொல்லி வரிவிலக்கு பெறுகிறார் எனும் போது அவரின் பண வெறியை என்னென்று சொல்வது? அவரது பணவசதிக்கு வெறும் பிசாத்து காசு ரெண்டு கோடிக்காக இப்படியொரு பொய் சொல்ல வேண்டுமா?
ஆனால் என்ன நடந்தாலும் எத்தனை முறை நடந்தாலும் கிரிக்கெட் மீதான மோகமும் வெறியும் இந்தியாவில் குறையாது. ஐ.பி.எல் விளையாடுவதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமும் காட்டாமல் இங்கிலாந்தில் தோற்கிறது இந்தியா பெயரிலான அணி. இது அரசின் அணி அல்ல. ஒரு பணம் சம்பாதிக்கும் நிறுவனத்தின் அணி. அதை நாட்டுப்பற்றோடு தொடர்பு படுத்து கொடியையும் போட்டு எத்தனை எத்தனை மோசடிகள்.

இப்படிப்பட்ட அர்பணிப்பு மிகுந்த நேர்மையான நடிகருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று பலரும் கோரி வருவது நியாயம் தான். நடிகர் சச்சின் டெண்டுல்கர் பாரத் ரத்னா விருதுக்கு தகுதியானவர்தான்.

Thanks to www.4to40.com for royalty free image.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சாரு மீதான கீற்றின் அசிங்கமான நடவடிக்கையை கண்டிக்கிறேன்


சாருவின் மனைவி நித்யானந்தாவுக்கு எழுதியதாக ஒரு கடிதத்தை நித்யானந்தா வெளியிட்டாராம். அதை கீற்றில் ஒருவர் வியாக்ஞானம் எழுதி பதிப்பித்திருக்கிறார் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619:2011-07-17-06-08-51&catid=1:articles&Itemid=264) ஜூலை 17 இல். மிகவும் அருவருப்பான இந்தக் காரியத்துக்காக கீற்று வெட்கப்படவேண்டும். இன்னும் அது அகற்றப்படவில்லை. இதற்காக எனது கண்டனங்களை இதன் மூலம் பதிவு செய்கிறேன்.
சாரு எழுதுகிற விதத்தை வைத்து அவரின் மேல் ஒரு பயங்கரமான பிம்பம் உருவாகி இருக்கிறது. சாரு பெரிய பெண்பித்தன் என்று. அதில் உண்மை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அதைப்பற்றி நமக்கென்ன. நாட்டில் இது மாதிரி யாருமே செய்யவில்லையா? அதை ஒரு எழுத்தாளன் செய்துவிட்டால் தப்பா? சாரு ஒன்னும் நீதிபோதனை செய்யும் எழுத்தாளன் அல்ல. எனவே அவரின் தனிமனித ஒழுக்கம் குறித்து அவரும் அவர் குடும்பத்தினரும் கவலைப்பட வேண்டியது. மற்றவர்கள் அல்ல. சாரு குறித்து பலவித கதைகளும் உலவி வருகின்றன. அது குறித்து அவரே அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. ஒரு சாதாரண மனிதனுக்குள்ள பெரும்பாலான பிற்போக்குத்தனங்களையும் கொண்டிருக்கும் சாரு என்ற படைப்பாளி நல்லவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யாருக்கும் இல்லை. பெண்களை வீழ்த்த ஒருவனுக்கு எழுத்தாளன் என்ற போர்வை அவசியமல்ல. இந்தக் காலத்துப் பெண்கள் அவ்வளவு அறிவிலிகள் அல்ல.

 நித்யானந்தா வெளியிட்ட கடிதம் உண்மையானதுதானா என்ற சிந்தனை இல்லாமல் இதை கீற்று வெளியிட்டிருக்கிறது. ஒரு நாலாந்தர பத்திரிக்கைக்கும் இவர்களுக்கும் என்ன வித்யாசம்? இந்தக் கடிதம் உண்மையாகவே இருந்தாலும் அது குறித்து பிரஸ்தாபிக்க கீற்றுக்கு ஏன் ஆர்வம் என்று விளங்கவில்லை. சாரு என்ற எழுத்தாளர் மேல் தார்மீக கோபமோ வன்மமோ எதுவாக இருந்தாலும் தீர்த்துக்கொள்ள வேறு நாகரீகமான வழிகள் உள்ளன. இத்தனை நாள் கழித்து வெளியிட்ட நித்யானந்தா செய்தது அசிங்கம் என்றால் கீற்று செய்ததும் அதைத்தான். இப்படியெல்லாம் எழுதுவதால் சாருவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. தமில்ழில் தனித்துவமிக்க எழுத்தை கொண்டிருக்கும் சாரு என்ற படைப்பாளிக்காக ஒரு தமிழ் படிக்கும் வாசகன் என்ற முறையில் எனது கண்டனத்தை பதிகிறேன்.

"இக்கடிதம் சாருவின் வீட்டுப் பிரச்சினை என்பதைவிட, அசிங்கமான அவரது அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியை வெளிப்படுத்துகிறது என்பதுதான் உண்மை" இப்படி எழுதியிருக்கிறார் அந்த அறிவாளி. அடுத்தவன் வீட்டு அந்தப்புரத்தில் நுழைவது அசிங்கத்திலும் அசிங்கம். இதை எழுதியவருக்கும் நித்யானந்தாவுக்கும் ஒரே நோக்கம் தான் இருக்க முடியும்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

மைனாரிட்டி அ.தி.மு.க. அரசும் சமச்சீர் கல்வியும்

கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசின் அட்டூழியங்களினால் வெறுப்புற்ற தமிழக மக்கள் அ.தி.மு.வுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர் என்று பலதரப்பிலும் பேசப்படுகிறது. உண்மையில் நான் அன்றாடம் சந்திக்கும் பலதரப்பட்ட மக்களும் இதே மனநிலையில் தான் உள்ளனர். எதாவது மாற்றம் வருமென்று பெரிய நம்பிக்கையில் உள்ளனர். சில அடாவடிகளை குறைத்துக் கொண்டதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அரசும் மக்களுக்கு இந்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது. ஆனாலும் ஜெயலலிதாவின் உடன்பிறந்த வியாதியான வறட்டுப் பிடிவாதத்தால் இன்று நமது எதிர்காலமான பள்ளிக் குழந்தைகள் மிகவும் குழப்பத்திலாழ்ந்துள்ளார்கள்.
இந்த நிலைமைக்கு ஜெயலலிதாவின் பிடிவாதம் மட்டும் காரணம் அல்ல. அது ஒரு சின்ன காரணம் தான். உன்மையான காரணம் மெட்ரிக் பள்ளிக்கூட முதலாளிகள் தான். அவர்களின் லாபவெறியினால் தான் நம் குழந்தைகள் இரண்டு மாத காலமாக பாடங்களைப் படிக்காமல் உள்ளனர். இந்த காலகட்டத்தில் தான் சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று தெரியாத தமிழ் மக்களும் அது என்ன என்று கேட்டும் கவனித்தும் வருகிறார்கள்.
தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஒரு முழுமையான சமச்சீர் கல்வி அல்ல என்ற போதிலும் சமச்சீர் கல்வியை நோக்கிய பயணத்தின் தொடக்கம் என்ற வகையில் அது மிகவும் வரவேற்கத்தக்கது. சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத்திட்டம் சம்பந்தமான மாற்றம் அல்ல. அப்படியாக இருந்திருந்தால் இந்த மெட்ரிக் பள்ளி முதலாளிகள் இப்படி அரசுடன் கள்ளக்கூட்டு வைத்து பிள்ளைகளை வஞ்சித்திருக்க மாட்டார்கள். சமச்சீர் கல்வி படிப்படியாக கல்வியில் சமத்துவத்தை கொண்டு வரக் கூடியது. அன்றாடக்கூலிகளின் - அடித்தட்டுப் பாட்டாளிகளின் பிள்ளைகள் மெட்ரிக் பள்ளிகளிலும் கான்வென்ட்களிலும் படிக்க முடியாது என்பதால்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். கொஞ்சம் சாப்பாட்டுக்கு சிரமமில்லாத நடுத்தட்டு மக்கள் கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.
வசதி படைத்த கணவான்கள் பெரும்பள்ளிகளிலும் கோடீசுவரர்கள் வெளி நாட்டிலும்  தம் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். எப்படி நமது சமூகம் வர்க்கங்களாக பிளவுண்டு அடிமைப்பட்டு கிடக்கிறதோ அப்படியே சமூகத்தின் அங்கமான கல்வியும் வர்க்க வேறுபாடுகளால் தளைப்பட்டு கிடக்கிறது. இப்படி சொல்வதை சிலர் புதியதலைமுறை பத்திரிக்கைகளில் வரக்கூடியதைப் போல கம்யூனிஸ்ட்டுகள் என்று கிண்டலடிக்கலாம். ஆனால் இது தான் உண்மை. காசு உள்ளவன் பிள்ளைகள் பெரிய பள்ளிகளில் படிப்பதும் காசு இல்லாதவன் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் படிப்பதும் கஞ்சிக்கே இல்லாதவன் பிள்ளை பள்ளிக்குப் போகாமல் வேலைக்குப் போவதும் மறுக்க முடியாத சமூக அவலங்கள்.
பெருநகரத்தில் கணவான்களின் காசுக்காக பள்ளிக்கூடத்தொழில் நடத்தும் சோ. ராமசாமி போன்ற பார்ப்பன அறிவாளிகள் சமச்சீர் கல்வியை கட்டைவண்டி என்று கிண்டலடிக்கிறார்கள். அதன் பிண்ணனியில் தம் வருமானம் குலைந்து விடக் கூடாது என்ற ஆற்றாமையே எனக்குக் கேட்கிறது. இப்படி அரசு பள்ளிகளின் கல்வித்திட்டம் தனியார் பள்ளிகளிலும் அரசுப்பள்ளிகளிலும் ஒன்றே என்று சொல்லி விட்டால், தாம் உயர்ந்த கல்வியை கொடுப்பதாய் புளுகிவிட்டு காசு பார்க்க முடியாது என்ற கடுப்பிலேயே தனியார் பள்ளி முதலாளிகள் என்ன விலை கொடுத்தாவது இந்த சமச்சீர் கல்வித்திட்டத்தை முடக்க முயல்கிறார்கள்.
தனியார் பள்ளி முதலாளிகள் இங்கே கிடந்து துடிப்பதில் அர்த்தம் இருக்கிறது. அரசும் ஏன் கிடந்து துடிக்க வேண்டும்? புரிந்து கொள்வது மிக எளிது. இது மக்களுக்கான அரசு அல்ல. பெரும்பான்மையினருக்கான அரசு அல்ல. காசு கொழிக்கும் சிறுபான்மையினரான முதலாளிகளுக்கான அரசு இது. வார்த்தைக்கு வார்த்தை மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று வசைபாடிய ஜெயலலிதா தலைமையில் இன்று தமிழகத்தில் நடப்பது கருத்தியல் மைனாரிட்டி அரசு. பெருந்திரளான மக்களின் விருப்பத்துக்கு எதிராக கொஞ்சமே கொஞ்சம் உள்ள கல்வி வியாபாரிகளின் தயை வேண்டி தமிழக அரசு இந்த சமச்சீர் கல்வியை முடக்க பெரும் பிரயத்தனம் எடுத்து வருகிறது. இப்படி சில முதலாளிகளின் நலனுக்காக பாடுபடும் மைனாரிட்டி அ.தி.மு.க அரசு மிகவும் தவறாக வழி நடத்தப் படுகிறது என்று அரசு வக்கீலே சொல்கிறார். பின் அவர் அது தன் சொந்தக் கருத்து என்று பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்பட்டேன். மக்கள் விரோத அரசுகள் ஆளும் நாட்டில் நீதிமன்றம் எப்படி இருக்கும்? அதுவும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கும். உச்ச நீதிமன்றம் வரை இந்த விவகாரம் போய் விட்டது. உச்ச நீதிமன்றம் பாடப்புத்தகங்களை வழங்கும் கெடுவை தல்லிப் போட்டுக் கொண்டே போகிறது. பாடப்புத்தகங்கள் வழங்க பத்தாம் தேதி வரை கெடு விதிக்கும் கோர்ட், தீர்ப்பை இருபத்தி ஆறாம் தேதி வரை தள்ளி வைக்கிறது. யாருக்காக இந்த நாடகமென்று இனியும் சொல்ல வேண்டுமா? தமிழக அரசும் ஒரு படி மேலே போய் விட்டது. தீர்ப்பு இன்னும் வரவில்லை. அதற்குள் பாடப்புத்தகங்களை அச்சிட முதலாளிகளை அரசு தேர்வு செய்து கைகாட்டியும் விட்டது. என்ன பாடத்திட்டம் என்ற தீர்ப்புக்கு முன்னமே இப்படி அடாவடி யார் செய்வார்கள்? சந்தேகமே இல்லாமல் பாசிஸ்ட்டுகள் தான் (என்னிடம் சில நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். பாசிசம் என்றால் என்னவென்று. வெகுசிலரின் நலனுக்கான தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக பெரும் பான்மையான மக்களின் மேல் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஏவிவருகிறதான இந்த அரசுதான் பாசிச அரசு என்பதை அவர்களுக்கு இதன் மூலமாக சொல்லிக் கொள்கிறேன்).
ஏன் சமச்சீர் கல்வி வேண்டும்? எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக வேண்டுமானால் எல்லாமும் சமமாக வேண்டும். (அம்பேத்கர் சொன்ன குட்டையான கைக்கு நீளமான வாளும் நீளமான கைக்கு குட்டையான வாளும் என்ற எடுத்துக் காட்டை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்). மிக முக்கியமாக கல்வி சமமாக்கப்படவேண்டும்.  ஏற்றத்தாழ்வுகள் நிரம்பின இந்த சமூகத்தில் சமச்சீர் கல்வி அப்படியான சமத்துவத்தை கொண்டு வந்து விடுமென்று எதிர்பார்க்க முடியாது. ஒன்றுமே இல்லாததற்கு எதாவது ஒன்று இருக்கலாம் என்ற ஆறுதல் காரணமாக சமச்சீர் கல்வியை வரவேற்க வேண்டும். போகப்போக ஒரு சமத்துவமான சமூகத்தில் உண்மையான சமச்சீர் கல்வியை கொண்டு வந்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில் சமச்சீர் கல்வியை வரவேற்கலாம். பள்ளிகளில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வு வெறும் பாடத்திட்ட மாறுதல்களால் சரிசெய்துவிடக் கூடியது அல்ல. என்ற போதிலும் இப்படியான ஏற்றத்தாழ்வுகள் மிக்க பள்ளிக்கல்வி இதுகாலம் வரை உருவாக்கி வந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களையும் போராட்டத்தின் முதல் அடியாக இந்த மாற்றம் இருக்கும்.
இதில் கிளைக்காமெடியாக ஞானி போன்றவர்கள் அரசு அலுவலர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முதலில் அவர்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறர்கள். அவர்கள் அரசுப்பள்ளிகளை தவிர்க்கக் காரணம் என்ன? தம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு தவறல்ல. அரசுப்பள்ளிகளை தரமுயர்த்தினால் அவர்கள் ஏன் அங்கே போகப் போகிறார்கள்? அரசுப்பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை; தமிழில் கற்றவர்களுக்கு முன்னுரிமை என்று அரசு சட்டம் இயற்றட்டும். அப்புறம் எல்லோரும் அங்கே போவார்கள். மத்திய அரசின் வேலைகளுக்கான உயர்கல்விக்கான விண்ணப்பங்களில் எல்லாம் எந்தக் கல்விமுறையில் படித்தாய் என்ற கேள்வி தவறாமல் இடம்பெறுகிறது. எனவே மக்கள் சி. பி. எஸ். சி மெட்ரிக் என்று தேடி ஓடுவதை தப்பு என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் பிழைக்க வேண்டும்; சம்பாதிக்க வேண்டும் என்று உந்துதல் உண்டு. அதன் காரணமான இப்படித்தான் செய்வார்கள்.
ஒரு சிறிய ஆய்வு கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் கொடூரத்தை விளக்கி விடும். மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் உயர்கல்விக்கு போனார்கள்; எத்தனைபேர் உயர்பதவிகளில் சேர்ந்தார்கள் என்று ஒரு கணக்கும் அதே ஆண்டில் இருந்து அரசுப்பள்ளிகளில் இருந்து உயர்கல்விக்கும் உயர்பதவிக்கும் போனார்கள் என்ற கணக்கும் எடுத்து சீர்தூக்கிப் பார்த்தால் இந்த ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கி வைத்த உண்மையான விளைவுகள் புரிந்து விடும். இப்படியான ஒரு ஒப்பீட்டு புள்ளிவிவரத்தை விசயம் தெரிந்தவர்கள் யாராவது கேட்டு வாங்கினால் பரவாயில்லை. அது சமூகத்தில் கல்வி பற்றிய மதிப்பிடுகளை மறுபரிசீலனை செய்ய உதவும். இதற்காக அப்துல் கலாமையும் அண்ணாதுரையையும் (மயில்சாமி) எடுத்துக்காட்டாக கொண்டு வந்து காட்ட வேண்டாம். அப்டுல் கலாமௌடன் அரசுப்பள்ளியில் படித்த மற்ற மாணவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? அண்ணாதுரையின் வகுப்புத்தோழர்கள் என்னவானார்கள்? இந்த வேர்களைத் தேடிப் போனால் உங்களுக்கு உண்மை உறைக்கும். அப்துல்கலாம்கள் போன்ற விதிவிலக்குகளைக் காட்டி அரசுப்பள்ளிகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவோர் உண்மையைத் திரிப்பவர்கள். (இதே போல இதற்கு முன்பு ஒரு கணக்கு எடுத்திருக்கிறார்கள். காவி பயங்கரவாதிகள் சங்க பரிவாரங்கள் பாபர் மசூதியை இடித்த போது அங்கே அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வேடிக்கை பார்த்த ஆறாயிரம் போலீஸ்காரர்களில் எத்தனை பேர் முஸ்லீம்கள் என்ற போது வந்த பதில் மிகவும் அதிர்ச்சிகரமானது. ஒருவரும் இல்லை. திட்டமிட்ட இது போன்ற அநீதிகள் ஒருபக்கம்; திட்டமிடாமல் அதன் போக்கில் வளர்ந்த சமூக அநீதிகள் ஒருபக்கம்).
இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி சி.பி.எஸ்.சி. முறையை மாற்றவில்லை. கல்வி மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாலேயே கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி பள்ளிகள் இவையெல்லாம் சமச்சீராக்கப்படவிலை. ஆங்லோஇந்தியன், ஓரியன்டல், மெட்ரிக் மற்றும் அரசுப்பள்ளிகள் மட்டும் இந்த சமச்சீர் கல்வியில் ஒன்றாக்கப்பட்டுள்ளன. நூறுக்கும் குறைவாக உள்ள ஆங்லோஇந்தியன் மற்றும் ஓரியன்டல் பள்ளிகள் இந்த சமமாக்கலில் பெரிதும் எதிர்ப்பு காட்டவில்லை. ஆனால் பதினோராயிரத்துக் குறைவான மெட்ரிக் பள்ளிகள் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகளோடு தம்மை சமப்படுத்திக் கொள்ள தயாராக இல்லை. இந்த பதினோராயிம் பள்ளி முதலாளிகளின் லாபவெறிக்கு ஐம்பதாயிரம் அரசுப்பள்ளிகளில் படிக்கிற லட்சக்கணக்கான மாணவர்களை பலியாக்கி இருக்கிறது அரசு.
இப்படி வெறும் பதினோராயிரம் பள்ளி முதலாளிகளின் ஊதுகுழலாக அரசு சுப்ரீம் கோர்ட்டில் போய் அவர்களுக்காக மக்களின் பணத்தில் வாதாடிக்கொண்டு இருக்கிறது. கோர்ட்டும் தீர்ப்பு சொல்கிறது. மேலும் முறையிடச் சொல்லுகிறது. பாடப்புத்தகங்களை வழங்க கெடு வைக்கிறது. அதையும் தள்ளி வைக்கிறது. மறுபடியும் தீர்ப்பை தள்ளி வைக்கிறது. தீர்ப்பை 26ம் தேதி வரை தள்ளி வைப்பது என்பது அந்த தேதி வரை பிள்ளைகளை தவிக்க விடுவது என்றுதான் அர்த்தம். இந்த இரண்டு மாத பாடச்சுமையை தீர்க்க இனிமேல் பிள்ளைகள் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகளை இழக்குமோ? எத்தனை சுமைகளைத்தாங்குமோ?
இப்படியெல்லாம் எழுதுவதால் தி.மு.க இதில் சரியாக நடக்கிறது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். பாளையங்கோட்டைக்கெல்லாம் அஞ்சாத சிங்கம் திகாரிலிருக்கும் மகளுக்காக ராம்ஜெத்மலானியை வைத்து வாதாடுகிறது. சமச்சீர் கல்வி பிரச்சனையில் அறிக்கையோடு சரி. சமச்சீர் கல்வி வந்தாலென்ன வராவிட்டாலென்ன. திகாரில் இருப்பவர்களை வெளியே கொண்டுவர வேண்டும்; வீரபாண்டியாருக்காக மறியல் நடத்த வேண்டும். இந்த நிலையில் சமச்சீர் கல்வி என்பது அவருக்கு ஒரு ஊறுகாய் கூட கிடையாது.  நாம் வேண்டுவதெல்லாம் ஒன்று சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துங்கள். அல்லது எந்த பாடத்திட்டம் என்பதையாவது விரைந்து முடிவெடுங்கள்.
(இந்தக் கட்டுரை தோழர் சிற்பிமகனுடன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டிருந்த போது அவரின் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.  கருத்து அவருடையத்து; எழுத்து என்னுடையது; உணர்வு இருவருடையது).

வியாழன், 14 ஜூலை, 2011

நேற்றும் மும்பையில் குண்டு வெடிப்புகள்: இன்னும் எத்தனை?

இன்றைய இந்து நாளிதழில் மும்பையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் படங்களை நிறைய போட்டிருந்தார்கள். பெரும்பாலும் இது போன்றவை வெறும் செய்திகளாகவே நான் கடந்து போவதுண்டு. இன்று அவ்வாறு முடியவில்லை. அந்தப் படங்கள் மிக அப்பட்டமாக குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு உயிரொடு இருப்பவர்களின் ரணங்களைக் காட்டியது என்னை மிகவும் வருத்தியது. இந்த மாதிரி படங்களை வெளியிடக் கூடாது என்பது என் தணிப்பட்ட எண்ணம். அது மக்கள் மனதில் உடனடியாக ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணும். அடிக்கடி இப்படி பார்கிற போது அது பழகி பின் நேரில் நடந்தால் கூட சகஜமாகி விடுமோ என்ற அச்சம் எனக்கு உண்டு. பத்திர்க்கைகள் விற்க வேண்டும் என்பதால் வெரும் ஓரிரு படங்களுக்கு பதிலாக இப்படி அதிக படங்களை போடுகிறார்கள். அது குறைக்கப்பட வேண்டும்.

மும்பை வாசிகள் உன்மையிலேயே தைரியசாலிகள் தான். எத்தனை குண்டுவெடிப்புகள்? பயங்கரவாத தாக்குதல்கள்? இத்தனைக்கும் மீறி மக்கள் அங்கே குவிந்த வண்ணமும் பிழப்பு நடத்தியும் வருகிறார்கள். தமில் நாட்டில் எவ்வளவு பயமின்றி வாழிகிறோம். சில நாட்களில் நான் பேருந்து ரயில்களில் போகும் போது நினைப்பதுண்டு. மும்பை மக்கள் நம்மைப் போலவே கவலையின்றி போவார்களா படு கவனத்தோடு போவார்களா என்று. அங்கே அமைதி நிலவட்டும்.

மும்பை போன்ற பெரு நகரங்களில் இது மாதிரியான தாக்குதல்கள் மிக எளிதாக நிகழ்த்தப் படுகிண்ரன. உலவுத்துறையாகட்டும் பாதுகாப்புத்துறையாகட்டும். கண்கானிப்பது மிக கடிணம் தான். மக்கள் கொஞ்சம் விழிப்போடும் பொறுப்போடும் இருந்து கொள்ள வேன்டியதுதான். இது மாதிரியான எல்லா நாசகாரியங்களிலும் உள்ளூர் வாசிகள் சிலரின் உதவியும் இருப்பதுண்டு. அது குறையாமல் அல்லது குறைக்கப் படாமல் இது மாதிரியான சதிச்செயல்கலை தடுப்பது கடினம்.

இந்த குண்டுகளை யார் வைத்தார்களோ?

திங்கள், 11 ஜூலை, 2011

மதுபான பொருட்களின் விலையேற்றம்: ஒழுக்கக்கேடான தமிழக அரசு





ரொம்ப நாட்களாக எதுவும் எழுதவில்லை. எதில் இருந்து ஆரம்பிப்பது என்ற சிறு தயக்கம். அது நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கேட்டபோது மறைந்து விட்டது. மதுபானங்களின் விலையை முன்னறிவிப்பின்றி அரசு உயர்த்தியுள்ளது. குவாட்டருக்கு ஐந்து ஆFப்புக்கு பத்து fபுல்லுக்கு இருபது என அநியாய விலை உயர்வு. அதுவும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி. சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை ஊழியர்களே மூடிவிட்டதாக சன் நியூஸ் சொன்னது. காரணம் மதியம் விலையுயர்த்தி விட்டு காலை விற்ற சரக்குக்கும் அதே விலைப்பட்டியல் படி பணம் கேட்டார்களாம் அதிகாரிகள்.

இது மட்டும் இல்லை. இது மாதிரியான எல்லா விலை உயர்வுகளுக்கும் இவர்கள் சொல்லும் அடிப்படை காரணம் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம். பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையுயர்வை காரணம் காட்டி விலையேற்றி வந்தன மைய அரசுகள். ஆனால் இப்போதை மைய அரசு ஒரு படி மேலே போய் இனி பெட்ரோலிய பொருட்களின் விலையை நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என நாயை அவிழ்த்து விட்டுவிட்டது. விளைவு கச்சா எண்ணெயின் விலை குறைவு பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பலமுறை விலையேற்றம் நடந்துவருகிறது.
இது மாதிரியான மக்கள் விரோத அரசுகள் இப்படித்தான் செய்யும். அதிலும் முந்தைய மற்றும் இன்னாள் தமிழக அரசுகள் இன்னும் கொடூரமானவை. மிகவும் சல்லித்தனமானவை. மாநகரப் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டணக் கொள்ளை நடத்துகின்றன. எங்கும் வெள்ளைப்பலகை பேருந்துகளே இல்லை (இவற்றில் குறைந்த பட்ச கட்டணம் ரூபாய் ரெண்டு). ஏழை மக்கள் அதிகம் புழங்கும் எல்லாப் பகுதிகளிலும் சொகுசுப் பேருந்துகளும் M வரிசைப்பேருந்துகளும் அலைந்து மக்களைக் கொள்ளையடித்து வருகின்றன. இதனினும் மேலாக கையில் சீட்டு கிழித்து கொடுக்கும் நடத்துனர்கள் புதியவர்களிடம் விருப்பம் போல விலையேற்றி கொடுப்பதை நானே அனுபவித்திருக்கிறேன். மெசினில் கொடுக்கும் டிக்கெட்டில் ஊர் பெயர் இருக்கும். கையில் கொடுப்பதில் இருக்காது. இதனால் மூன்று ரூபாய் பயணத்துக்கு நான்கு ரூபாய் டிக்கெட் கொடுப்பதெல்லாம் நடக்கிறது. இது கண்டிப்பாக நடத்துனர்கள் செய்யும் திருட்டு அல்ல. அவர்களின் மேல் திணிக்கப் படும் அதிகாரிகளின் லாபவெறி. இது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே உரித்தான குணம் .
சேவைத்துறையில் உள்ள அரசு நிறுவன்ங்கள் ஏன் லாபம் சம்பாதிக்க வேண்டும்? அன்றாடக் கூலிகளிடம் ஐம்பது பைசா கொள்ளையடித்து அல்லது பிச்சை எடுத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டுமா? டாஸ்மாக் ஊழியர்களும் இது போல லாபம் சம்பாதிக்க நிர்பந்திக்கப் படுபவர்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை (அவர்கள் அரசிடம் திருடுவதும் உண்டு/குடிமகன்களை ஏமாற்றுபவர்களும் உண்டு.). டாஸ்மாக் பார்களில் ஒரு தண்ணீர்ப்பொட்டலத்தின் விலையென்ன என்ரு விசாரித்துப் பாருங்கள். பிரபஞ்சன், சாரு நிவேதிதா அ. மார்க்ஸ் முதலானோர் டாஸ்மாக் பார்களின் சுகாதாரக் கேடு பற்றியும் இழி நிலை பற்றியும் எழுதியும் பேசியும் வருகிறார்கள். வரவேற்கத்தக்கது. குடிகாரர்கள் என்று இழித்துப் பேசப்படும் அவர்கள் தான் இந்த அரசு இயந்திரத்தின் சக்கரங்களை ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு இப்படி சரக்கு விற்று சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அதன் லாபவெறி அப்படி செய்யத்தூண்டுகிறது.
மதுபான பொருட்களின் விலையேற்றம் வெறும் குடிகாரர்களை மட்டும் பாதிப்பதல்ல. அது நல்லறம் பேண வேண்டிய அரசின் குணக்கேட்டின் மற்றுமொரு எடுத்துக்காட்டு.

புதன், 1 ஜூன், 2011

இரண்டு வார கால அதிமுக ஆட்சி


ஜெயலலிதா தலைமையிலான மிகுந்த பலம் கொண்ட அதிமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரா காலங்கள் முடிந்து விட்டன. மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை மட்டுமே விரும்பியுள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த ஆட்சி குறித்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஆட்சி குறித்த சில முணுமுணுப்புகள் இப்போதே தொடங்கி விட்டன. மின்வெட்டை இவர்களால் உடனடியாக குறைக்க முடியாது என்பது உண்மையானாலும் குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் / எடுக்கிறார்கள் என்பது குறித்த விளக்கத்தை தெரிவிக்க வேண்டியது அரசின் அதாவது முதல்வர் ஜெயலலிதாவின் கடமை. இனி தமிழக அரசு என்றாலே முதல்வர் ஜெயலலிதாதானே?

சட்டசபை இடமாற்றம், மேலவை கைவிரிப்பு நலத்திட்ட பெர்யர்மாற்றங்கள் என ரணகளமாக தொன்டங்கிய இந்த அரசின் எதேச்சதிகாரப் போகினை தட்டிக் கேட்கும் மனனிலையில் திமுக இல்லை. அதற்கு இப்போது டெல்லி திகார் ஜெயிலில் கிளை திறக்கும் பணினெருக்கடி. தேமுதிக ஒன்றும் செய்ய முடியாத செத்த பாம்பு. மதிமுக மட்டும் இதை எதிர்த்து சில சுவரொட்டிகள் ஒட்டியதாக படித்தேன்.

இந்த அரசின் ஆரம்பகால அட்டூழியங்களில் என்னை மிகவும் வெறுப்படைய செய்தது சமச்சீர் கல்வியை தலைமுழுகியது. அதன் குறை நிறைகளை சீர்தூக்கி இன்ன்னும் கொஞ்சம் பொறுமையாக முடிவெடுத்து இருக்கலாஅம். இது பிள்ளைகளின் எதிர்கலம். அவர்கள் குழம்பித்திரியும் வகையில் இந்த அரசுகள் நடவடிக்கை உள்ளன. கல்விக்கட்டணத்தை முறைப்படுத்த முதல்வர் முனையாதது அவரின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்.

சுண்டக்க மந்திரிகளைப் போட்டுக் கொண்டு அவர்கள் கைகட்டி வாய் பொத்தி நிற்பார்கள் என்று தனியதிகாரம் படிக்கும் எண்ணம் முதல்வருக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு வலுவாக உள்ளது. பொறுத்துப் பார்ப்போம்.