சனி, 30 மார்ச், 2013

மரணதண்டனையும் இஸ்லாமிய சட்டங்களும்: தொடர் விவாதம்-ஒன்று


இந்த விவாதம் நண்பர் இம்ரான் நாஷித் இவர்களுக்கும் எனக்கும் சில வாரங்களாக நடந்த இ மெயில் விவாதத்தின் தொகுப்பு. மொத்தம் ஐந்து வாய்ப்புகள்; முதல் வாய்ப்பு இங்கே. அடுத்தவை பின் தொடரும்



மரண தண்டனை சரியா?

 ஐந்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாதத்தில் இது எனது முதல் வாய்ப்பு.  
அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்குஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும். 
மரண தண்டனை சரியா தவறா என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படையை நாம் மனதில் கொள்ள வேண்டும். எந்த நாட்டினுடைய சட்டமானாலும் அதன் முதல் நோக்கம் மக்களை நல்வழிப்படுதுவதல்ல !!! எந்த காலகட்டத்திலும் எந்த நாட்டிலும் இது இரண்டாம் பட்சம் தான். நல்வழிபடுதுவதற்கு அது ஒரு சித்தாந்தத்தையோ மத போதனைகளையோ செய்யும் கேந்திரமல்லமாறாக மக்களை ஆட்சி செய்யும் நாடு. மக்களை ஆட்சி செய்யும் நாட்டில் சட்டம் இயற்றும் போது மக்களிடையே குற்றங்கள் குறைவதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,கொடுக்கிறார்கள்.. 
குற்றங்களை குறைப்பதற்கு அவர்கள் இடும் சட்டமானதுமக்களை நல்வழிப்படுத்தத்தான் செய்யும். இது தான் அடிப்படை. 
 இஸ்லாம் சொல்லும் சட்டமானதுகுற்றங்களை  குறைக்க உதவுகிறது. இஸ்லாமிய சட்டங்களை எதிர்க்கும் இன்னபிற சட்டங்களானது குற்றங்களை குறைக்க உதவவில்லை என்கிற சாதாரண உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தும் இது போன்ற விவாதத்திற்கு நீங்கள் வந்திருப்பதே ஆச்சர்யமான ஓன்று. 
 அடுத்துமரண தண்டனை அல்லது தூக்கு தண்டனை என்பது காட்டுமிராண்டிதனமானது என்பது உங்கள் கருத்து என்றால்அது போல ஒரு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கொடுப்பதும் காட்டுமிராண்டி தனமானது என்று இன்னொருவர் வாதம் வைக்கலாம். 
 என்னப்பா !!! ஒரு கொலையை செய்தான் என்பதற்காக அவனை அவனது வாழ்நாள் முழுவதும் தனி சிறையில் அடைப்பது என்பது மனித உரிமை மீறல் இல்லையா?? என்று ஒருவர் கேட்கலாம். 
 ஒரு குற்றத்தை ஒருவன் செய்தான் என்பதற்காக ஆறு மாதம் சிறையில்அடைப்பதை கூட ஒருவர் விமர்சனம் செய்வார். அதுவும் மனித உரிமைக்கு அப்பாற்பட்டது என்று வாதம் வைப்பார். ஒரு பிக்பாகட் அடித்தான் என்பதற்காக அவனுக்கு 15 நாள் காவலா?? இது மனித உரிமைக்கு விடப்பட்ட சவால் இல்லையா?? என்று வேறொருவர் கேட்பார்.
 அதாவதுமரண தண்டனை விதிப்பது தான் காட்டுமிராண்டித்தனமானது,அதை விடுத்த வேறெந்த தண்டனையும் காட்டு மிராண்டிதனமானது இல்லை என்று வாதம் வைப்பவர்கள் அதை தர்கா ரீதியாக நிரூபிப்பதாக இருந்தால் மேற்கண்ட கேள்விகள் எழத்தான் செய்யும்.

மேலும்கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களால்பாதிப்பிற்கு  உள்ளானவர்  ஒரு புறம் இருக்க ,இது போன்ற குற்றச்செயல்கள் நிகழ்வது ஒரு சமுதாயத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் எப்போதும் நிம்மதியற்ற பாதுகாப்பற்ற அச்ச நிலைக்குவழி வகுக்கும் 


உதாரனத்திற்க்கு  டெல்லியில் நடந்த அந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை எடுத்து கொள்ளுங்கள் அந்த பெண் இரவில் தன்  ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதும் அப்பெண் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம்

 இந்த சம்பவத்தில் நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை சித்ரவதை செய்து கற்பழித்துள்ளனர் அந்த பெண் துடித்து கொண்டு இருந்த வேலையில் நீங்களோ நானோ இல்லை அந்த பெண் மாத்திரம் தான் இருந்துள்ளார் ,அந்த பெண்ணை கற்பழிக்கும் பொழுது அவள் எத்துனை முறை கதறி இருப்பால் எதிர்த்து போரிட்டிருப்பால் ஆனால் அந்த மனித மிருகங்கள் ஒன்று அல்ல பேரும் சேர்ந்து கற்பழித்துக் குடலை உருவிக் கொன்றுள்ளனர். இப்படிப்பட்ட மனித மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவது எந்த விதத்திலும் நீங்கள் கூறியது போல அடிபடைவாதமோகாட்டுமிராண்டித்தனமோ கிடையாது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை உயிர் பிழைத்திருந்து கயவர்களை தூக்கிலிடுங்கள் என்று அந்த பெண்ணே உரிமை கூறினாலும் தாங்கள் அவளை நோக்கி , "என்னம்மா காடுமிராண்டிதனமா சட்டம் சொல்றன்னு" நீங்கள் அந்த பெண்ணை நோக்கி கூறுவது எந்த அளவிற்கு பகுத்தறிவு (?)வாய்ந்தது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பாதிப்பிற்கு உள்ளான பெண்ணிற்கும் அவள் தாய் தந்தை மற்றும் குடும்பதினர்க்கே அந்த வலி தெரியும் கருத்து சொல்லும் நீங்களோ ஏன் என்னாலோ கூட முழுமையாக அனுபவிக்க முடியாது .
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல,குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?)உரிமைப் போராளியாக இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று கூறும் உங்கள் கருத்து அதிர்ச்சியை தான் தருகிறது .. 

சரி இவ்வளவு வேண்டாம் தாங்கள் பெரும் அளவிற்கு வன்மையாக கண்டித்த இலங்கையில் நடந்த அந்த கொடூர கொலைகள் ,மனிதநேயமற்ற அந்த காட்டுமிராண்டிதனத்தை செய்த இராஜபக்க்ஷேவை தூக்கிலிட்டால் அது மனித உரிமை மீறல், அப்படி தானே ?
அதாவது பாதிக்கபட்டவன் பாதிப்பு அரங்கேறி விட்டது இப்போ என்ன செய்ய ? , பாதிப்புக்கு உள்ளாகியவன் உயிருடன் உள்ளான்இவனை எப்படி தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றலாம் என கூறுவது எந்த பகுத்தறிவோ ?

திரு .ஜெயபிரகாஷ் அவர்களே : பாதிப்புக்கு உள்ளானால் தான் அந்த வலி தெரியும் ..
இங்கு மற்று ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும் இவை போன்ற கொடூர செயல்கள் செய்திருப்பவரை கொன்றே ஆக வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் கூரவி ல்லை அந்த பாதிக்கப்பட்ட குடும்பம் ,மன்னித்தால் அந்த குற்றம் புரிந்தவரை மன்னித்து விட முடியும் .
இங்கு பாதிபிர்க்கு உள்ளானவர்களிடம் தண்டிபதர்க்கான உரிமை வழங்க பட்டுள்ளதுஇவர் தான் முடிவெடுக்க வேண்டியவர்கள் நீகளோ நானோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ அல்ல .
சட்டங்கள் கடுமையாக ஒரு சமுகத்தை பாதுகாப்பான நிம்மதியான வாழ்விற்கே வழிவகுக்குமே தவிர அது" சட்டங்கள் கடுமையாக இருந்தால் அந்த சமுதாயம் நாகரீகமடையவில்லை என்றுதான் அர்த்தம்" என்ற தங்கள் கருத்து எப்படி விளங்கி கொள்வது என்றே புரியவில்லை .
கொலை கற்பழிப்பு போன்ற குற்றம் செய்த மனித மிருகங்களை தண்டிக்க மரண தண்டனை விதிப்பது எந்த விதத்திலும் தவறு கிடையாது .

குற்றவாளியை மென்மையாக பாவிக்கும் பார்வை இது அறிவு முதிர்ச்சியில்ல .

ஒரு கோடி மனிதர்கள் நிம்மதியாக வாழ , 10 மனித மிருகங்களை தூக்கிலிடுவது எந்த வகையிலும் காட்டுமிராண்டி தனம் கிடையவே கிடையாது .
இவ்வாறு சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தனி மனிதன் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் .
தாங்கள் கூறிய "சட்டங்கள் பயப்பட அல்ல. மனிதன் பண்பட." என்பது கவிதை நடைக்கு அழகாக உள்ளதே தவிர நிஜ வாழ்விற்கு பொருந்தாத வரிகள் அவை .
மனிதம் பாதுகாப்பாக இருக்கவும் பயன்பெறவும் மனித தோல் போர்த்தி உலா வரும் மிருகங்களின் உள்ளத்தில் பயம் இருக்க வேண்டியது என்பது ஒரு தேவை என்று நான் கூறவில்லை அது கட்டாயம் என்று கூறுகிறேன்.
தூக்கு தண்டனை என்பது மனிததை மிருக இனத்திடமிருந்து காபற்றுமே தவிர அழிக்காது.

உங்களது முதல் வாய்ப்பின் போது மேலே நான் எழுப்பியுள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில்களை தந்து உங்கள் கருத்தை நிலைநாட்டவும்.


அன்பின் இம்ரான்


சட்டங்கள் மக்களை நல்வழிப்படுத்த அல்ல; என்றும் சட்டங்கள் மக்களை
நல்வழிப்படுத்தும் என்றும் அடுத்தடுத்த பத்திகளில் முரண்படும் உங்கள்
விவாதம் ஆச்சர்யப்பட வைக்கிறது. அரசு-நாடு-ஆட்சி-அரசாங்கம் என்பவற்றின்
தாத்பர்யம் மீதான உங்களின் முதிர்ச்சியின்மை மேலும் விவாதம்
செய்யத்தடையாக இருக்கும். நாடு சட்டம் இயற்றாது. அரசு தான் சட்டத்தை
இயற்றும். அரசு என்றால் மன்மோகன் தலைமையிலான அரசு போல. அரசாங்கம் என்பது
அரசின் அங்கம். அரசின் கொள்கை முடிவுகளை சட்டங்களை நிறைவேற்றி
பாதுகாக்கும் அரசின் துறைகள் நீதித்துறை போல. இது உங்கள் புரிதலுக்காக.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? குற்றங்களூக்கும் மேலாக மக்கள்
நல்வழியை அடைந்து விட்டார்களா? சட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவை. பயப்பட
வேண்டியன அல்ல. இஸ்லாமிய சட்டங்கள் அதீத குரூர தண்டனைகளை முன்வைத்து
மக்களை பயப்படுத்துகின்றன. ராணுவத்தில் தான் இத்தனை ஒழுங்கும்
கண்டிப்பும் தேவை. சிவில் சமூகத்தில் சுதந்திரம் வேண்டும். சுதந்திரம்
என்றால் கட்டற்ற காட்டுமிராண்டித்தனம் அல்ல. பொறூப்பை உணர்ந்த
அடுத்தவனுக்கு தொல்லை தராததே சுதந்திரம். அப்படியான சுதந்திரத்தை
பெயரளவேனும் பிற அரச சடங்கள் வழங்குகின்றன. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா.
தாலிபன்கள் மதக் காவலர்கள். இதுவா இஸ்லாமின் சமூக நீதி?

மனித உரிமைப்பாதுகாப்பு என்பது நம் இந்தியச்சூழலில் எனக்கு ஒரு
கெட்டவார்த்தை. மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயல்சக்திகளின்
சதிவேலைகளின் பங்காகவே நான் மனித உரிமை அரசுசார தொண்டு நிறுவனங்கள்
இவற்றை பார்க்கிறேன். மரணதண்டனிக்கு எதிரான என் வாதங்கள் மனிதநேயத்தின்
அடிப்படையில் தான். மேலாக ஒரு நாகரீக சமூகத்தை நாடும் எனக்கு அந்தச்
சமூகத்தில் மரணதண்டனை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் தேவையற்றவையாகத்
தோன்றுகின்றன.

கோவையில் சிறு பெண்ணை சீரழித்துக் கொலை செய்த மோகன்ராஜை மக்களின் அல்லது
அந்தக்குழந்தையின் சமூகத்தை திருப்திப்படுத்த சுட்டுக்கொன்றது போலீஸ்.
அப்போதும் நான் எதிர்த்தேன். மறுமடியும் சொல்கிறேன். தனிமனிதன் தப்பு
செய்தால் அது பலவீனம். அதையே அரசும் சட்டமும் செய்தால் அநீதி.

டெல்லி சம்பவம் பற்றி. இதுவரை எத்தனை பெண்களை அப்படிக்கொன்று
இருப்பார்கள்? எத்தனை தண்டனைகள்? இருந்தும் குற்றங்கள் குறைய வில்லை.
பூலான் தேவி அனுபவிக்காத கொடுமைகளா? அவர் திருப்பி கொடுத்ததை
பார்த்துமாவது திருந்தினார்களா? மாட்டார்கள். வெறும் பயம் மட்டுமே மனிதனை
குற்றத்தில் இருந்து விலக்கிவைக்காது. மனத்தெளிவும் நாகரீகமும் வளரும்
போதுதான் குற்றங்கள் குறையும். இவற்றை எந்த மரண தண்டனையும் ஏற்படுத்தி
விட முடியாது. அந்த 6 பேரை தூக்கிலிட்ட பின்பு டெல்லியிலோ வேறெங்குமோ
இப்படி நடக்காது என்று யார் உத்தரவாதம் தருவார்கள்? இதெல்லாம் வெறும்
ஆவேசப்பேச்சுக்கள். நிதானிப்பவன் இப்படி பேசமாட்டான்.

பாதிப்புக்கு உள்ளானால் மட்டும் தான் வலி தெரியும் என்று இம்ரான் நாசித்
எத்தனை பாதிப்புக்கு உள்ளாகி வலியை தெரிந்துள்ளீர்கள்? இதெல்லாம் விவாதம்
செய்ய சரியாக இருக்கும். உண்மை நிலை என்னவென்றால் பகுத்தறியும் எல்லா
மனிதனுக்கும் மற்றவனின் வலி கண்டிப்பாக தெரியும்.

குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட குடும்பம் தண்டனை விதிக்கலாம்-விலக்கலாம்
என்பது இஸ்லாமிய சட்டத்தின் மேன்மையென சொல்கிற என் சகோதரர்களே அதுதான்
இஸ்லாமிய சட்டத்தின் ஆகப்பெரும் பலவீனம். சட்ட்டங்கள் எல்லாருக்கும்
பொதுவில் இருக்க வேண்டியவை. அது நெகிழும் தன்மையோடிருந்தால் அது
சட்டமல்ல. சம்பிரதாயம்.

சட்டங்களின் கடுமை-நாகரீக சமூகம் குறித்து.
பொது இடத்தில் சிறிநீர் கழிக்காமல் இருப்பது; நாலு பேர் இருக்கிற
இடத்தில் எச்சில் துப்பாமல் இருப்பது; பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணம்
செய்வது இப்படி சமூகத்துக்கான நாகரீகம் இருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு
சட்டமும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் குறைய வேண்டுமானால் சட்டம் மட்டும்
போதாது. நாகரீகம் வளர வேண்டும். இதே போலத்தான் பிற பெரிய குற்றங்களும்;
கற்பழிக்காமல் இருப்பது ஒரு சமூக மனிதனின் அடிப்படைக்கடமை. அதை விடுத்து
அவ்வாறு செய்பவன் சமூகத்தின் வியாதி. அத்ற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல.
காலங்காலமாக ஆணாதிக்கத்தை போற்றி வரும் ஒரு சமூகத்தின் வெளிப்பாடே அந்தக்
காமவெறியன்.

அந்த 10 மிருகங்களை அழித்தால் நாட்டில் கோடி மக்கள் நிம்மதியாக
இருப்பார்கள் என்கிற உங்கள் கருத்தையே வேறு வரிகளில் சமூகத்தின்
மனசாட்சியை திருப்திப்படுத்த  என்று சொல்லி அஃப்சல் குருவை
தூக்கிலேற்றிவிட்டார்கள். அஃப்சல் குரு அஜ்மல் கஸாப், பேரறிவாளன் அவ்வளவு
ஏன் ராஜபக்‌ஷே உட்பட யாரும் அரசால் கொல்லப்படக்கூடாது. சண்டையில்
சாவதற்கும் ஒரு சமூகத்தால் சாவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று
எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது
குறைந்துள்ளதா? இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில்
உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்
நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து காரணிகளை சரி செய்யாமல்
குற்றம் செய்தவனைக் கொண்று விட்டால் அந்தக் குற்றத்தை அங்கீகரித்தது
போலாகும். எதனால் குற்றம் நடந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும் என்று யோசிப்பதுதான் அறிவு.

உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளேன். வாழ்த்துக்கள்.

புதன், 20 மார்ச், 2013

பரதேசி-பாலாவின் முதல் படம்


பரதேசி-பாலாவின் முதல் படம்




பரதேசி-பாலாவின் முதல் படம்
சில காலமாக படங்களை திரையரங்கம் சென்று பார்க்க முடியாத அளவுக்கு நேர நெருக்கடியில் இருக்கிறேன். ஊருக்குப் போனால் மட்டுமே படங்கள் பார்ப்பது என்றாகி விட்டது. கடந்த திங்கள் அன்று கரூர் பொன் அமுதாவில் முருகேசன் மாமாவுடன் பரதேசி பார்த்தேன். முடிந்து வெளியில் வரும்போது சொன்னேன்; இந்தப் படம் விருதுகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று.
இந்தப் பதிவு பரதேசிக்கான விமர்சனம் அல்ல. படத்தைப் பார்க்க என் பரிந்துரை.
பாலா என்ற படைப்பாளியின் மற்றெல்லா படங்களைக்காட்டிலும் இந்தப் படம் மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் இதை பாலாவின் முதல் படம் என்கிறேன். மற்ற படங்கள் அவருக்கான பயிற்சி.
படத்தைப் பற்றி பலவிதமான எதிர்க்கருத்துகள் உலவுகின்றன. நீங்கள் கிராமத்தில் வாழ்ந்தவராக-வாழ்பவராக இருந்தால் அவசியம் பார்க்கவேண்டிய படம். எதிர்க்கருத்துகள் பேசுபவர்கள் பெரும்பாலும் நகரவாசிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. என்னென்னவோ சொல்கிறார்கள். கேமரா, இசை, இந்துத்துவம், சாதியம் என்று பல தளங்களில் பாலாவின் இந்தப் பரதேசி படம் விமர்சன்ங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்தப் பதிவு அந்த விமர்சன்ங்கள் எதையும் மறுக்கவோ வக்காலத்து வாங்கவோ அல்ல.
எல்லோரும் சொல்வதைபோல இந்தப் படம் வெறுமனே தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் அவலத்தை மட்டும் சொல்லிப்போகவில்லை. எதோ ஒரு காரணத்துக்காக புலம் பெயரும் யாவரும் அனுபவிக்கும் வாதைகளை தேயிலைத்தோட்ட பிண்ணனியில் இந்தப் படத்தில் பார்க்கிறேன். இயல்பான கிராம வாழ்வின் எளிமையான கொண்டாட்ட வாழ்வை அழுத்தமாக பதிவு செய்யும் முற்பாதியின் தலைகீழ் தொடர்ச்சியாக அங்கிருந்து காசுக்காக புலம் பெயரும் மக்களின் அடிமை வாழ்வை பிற்பாதியில் தனக்கே உரிய குரூரக்காட்சிகளால் சொல்லிப்போகிறார் பாலா. அந்த மக்கள் பஞ்சத்துக்காக போவதாக காட்சிகள் இல்லை. இருக்கிற வாழ்வில் இருந்து மேலெழும்பும் முகமாக அவர்கள் புலம் பெயர்வதும் அதனால் அவர்கள் படும் துயருமே பட்த்தின் மையப்புள்ளி. இடைவேளைக்கு முன்னதான அந்த நெடிய அற்புதமான பாடலில் ஒரு வரி-ஊரைத்தேடி ஊரை விட்டு ஊர் போகுதே என்று. அதுதான் படத்தின் ஆன்மா.
கருத்த கண்ணி-படத்தின் உண்மையான கதை நாயகி. இயக்குநரின் மொழியை பேசுபவள். பட்த்தின் துவக்கத்தில் மொத்த பட்த்திலும் பேரழகியாக பெருமகிழ்வானவளாக அறிமுகமாகி பட்த்தின் இடைவேளையில் ஒரு இருண்மைத்தன்மையை முகத்தில் காட்டி படம் நகர நகர மெய்யழகு அழிந்து கடைசியில் மரித்தும் போகிற அவளது பாத்திரம் இயக்குநர் சொல்வதை சொல்லிச் செல்கிறது.
பாலா தன் முந்தைய எல்லா படங்களிலும் அய்யர்கள் சினிமாக்காரர்கள் போன்றோரை மிகவும் கேவலமாக சித்தரித்து கிண்டலடித்தே பழக்கப்பட்டவர். இந்த முறை மதம் மாற்றும் கிறிஸ்தவர்களை சகிக்கமுடியாத வகையில் கிண்டலடித்து இருக்கிறார்.
வால்பாறையில் ஒரு வருடம் வாழ்த்திருக்கிறேன். அடகுக் கடைகளே அதிகம். கூலி தரும் நாளில் கந்து வட்டிக்காரர்கள்  தனிவரிசையில் நின்று வாங்கிப் போவார்கள். பலப்பல கட்சிகள் உள்ள இந்தக் காலத்திலும் இதுதான் நிலை. அடிமைத்தனம் என்பது நம் ரத்த்தில் ஊறியது. அது பயம், விசுவாசம், பாதுகாப்பு என பல வடிவங்களில் காலங்காலமாக வாழ்ந்து வருகிறது. வேலூர்க்கோட்டையில் முதல் முதலாக நுழையும் போது ஒரு வெள்ளைக்கார தளபதி நினைத்திருக்கிறார்- இங்குள்ள மக்கள் ஆளுக்கு ஒரு கல்லை எறிந்தால் கூட நம் சின்னப் படை சின்னா பின்னமாகி விடும் என்று. ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆயிரம் லட்சம் என பல எண்ணிக்கைகளில் சகோதரர்கள் கொல்லப்பட்ட போது சினிமா கிரிக்கெட் என அந்தக் குறையும் இல்லாமல் அநேகம் பேர் இருந்தோம். அப்படியான வழக்கமான் ஒரு தமிழ்ச்சமூகம் அங்கே ஆனைமலையில் பட்ட துன்பங்களை பதிவு செய்திருக்கும் வகையில் தமிழின் மிக முக்கியமான படங்களின் வரிசையில் பரதேசியும் சேர்கிறது. பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து முதல் முறையாக ஒரு மக்களுக்கான படம் வந்திருக்கிறது. இதை பாலு மகேந்திராவே விரும்பியிருக்க மாட்டார்.
மிக நீண்ட பதிவாக எழுத வேண்டியது. நேர நெருக்கடி காரணமாக முடிக்க வேண்டி உள்ளது.
கலை-அறிமுகம் அருமை. என்ன ஒரு நேர்த்தி என்ன ஒரு மெனக்கெடல்? அட்டகாசம்.
செழியன் பாலாவின் கண்களை கடன் வாங்கி ஒளிப்பதிவு செய்திருப்பார் போல. பட்த்தின் ஆன்மாவை உயிரூட்டிய ரத்த ஓட்டமாக இவரின் உழைப்பு. வாழ்த்துக்கள் தோழர்.
இளையராஜா இல்லாவிட்டால் என்ன? எட்டுத்திக்கும் சென்று ஈட்டி வந்ததை ஜி.வி பிரகாஷ் கொட்டியிருக்கிறார்.
நியாயம்மாரே என ராசா அரற்றும் அந்த இறுதிக்காட்சியில் புதிய அடிமைகள் வரும் வரிசையில் தன் துணையையும் மகனையும் பார்க்க நேர்ந்தது எப்பேர்ப்பட்ட குரூரம்? அந்தச் சிறுவன் என் மகன் சாயலில் மகன் கலரில் இருக்கிறான் என்ற நினைப்பே என்னை கொல்கிறது. அப்படியான சூழலில் வாழ நேர்ந்திருக்கும் ஒருவனுக்கு அந்தக் கொடூரம் எப்படி இருந்திருக்கும்? அய்யோ....
அடக்குமுறைகளின், அடிமைத்தளைகளின் படி நிலை; பெண் சமத்துவம்; மதத்தின் பேராலான சுரண்டல், காதல் என பலதரப்பட்ட தளங்களின் வழியே பயணித்து யதார்த்தத்தின் குரூரம் முகத்தில் அறையும் படி முடியும் பாலாவின் இந்த முதல் படத்தை பார்ப்பது இதுவே கடைசி. 

images from : http://chennai365.com/events/director-balas-paradesi-audio-launch-invite-stills/


புதன், 6 மார்ச், 2013

சாவேஸ்-அடிப்படைவாதிகளின் அங்கலாய்ப்பு

விடுதலைப்புலிகளை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது; ஈழ விடுதலையை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது; ராஜபக்‌ஷேவை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது இவை எல்லாம் தமிழர்களுக்கு ஒற்றை நோக்கில் இருக்கலாம். சர்வதேச கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பலவித பரிமாணங்களை கொண்டவை. ஒருவர் ஆதரிக்கிறார் எதிர்க்கிறார் என்பதற்காக அவரின் மற்ற பங்களிப்புகளை மறப்பது கண்மூடித்தனம். மார்கண்டேய கட்ஜு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த முடியாது என்றதற்கும் இன்று பலரும் சாவேஸ் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவளித்ததை சுட்டிக்காட்சி தம்மை அறவாதிகள் போல ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவதற்கும் வித்யாசம் நிறைய உள்ளது. பால் தாக்கரே அப்பட்டமான அடிப்படை வாதி. சாவேஸ் அப்படியல்ல. ஒரு தூய்மையான இவர்கள் அளவுகோல்களின் படி முழுமையான போராளி அல்லவெனினும் லத்தீன் அமேரிக்க நாடுகளின் சுயமரியாதை மக்களின் நல்வாழ்வு குறித்த அவரின் பங்களிப்புகளை ஒருவரும் வசதிக்காக கூட மறக்கக்கூடாத ஒன்று. சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லர் சந்திப்புக்காக நேதாஜியையும் இந்து அபிமானத்துக்காக பாரதியையும் விலக்கி வைத்து பேசுவது சாவேஸை புறக்கணிப்பது இவை எல்லாம் அடிப்ப்டைவாதத்தின் ஆரம்ப கட்ட அறிகுறிகள். சந்தர்ப்பவாதம் செய்கிறார் என்று திருமாவளவனை கேலி செய்பவர்களையும் நான் இந்தப் பட்டியலில் வைக்கிறேன். இப்படியானவர்களிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை. சமூகத்தின் நோய்களாக மாறும் தன்மை கொண்டவர்கள்.