செவ்வாய், 7 மே, 2019

இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது


இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது
தமிழக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வட இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எல்லோரும் ஒன்று என்பவர்கள் உண்மையை அறியாதவர்கள் அல்லது அறிந்தே மறைப்பவர்கள். தமிழகத்தில் மூன்று தாழ்த்தப்பட்ட சாதிகள் பெரும்பான்மையாக அறியப்பட்டுள்ளன. பள்ளர் பறையர் மற்றும் சக்கிலியர். இவர்களில் சக்கிலியர் மேற்சொன்ன மற்ற இரு தாழ்த்தப்பட்ட சாதிமக்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்படுபவர்கள். படி நிலையில் அரசியல் சமூக தளங்களில் மிகவும் கீழான நிலையில் இருப்பவர்கள். இந்த மூன்று மக்களுமே ஒரே நிறையில் வராத போது வட நாட்டு தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி ஒரே தட்டில் வருவார்கள்? என்கிற போது தலித் என்ற சொல்லின் பொருத்தப்பாடு கேள்விக்குள்ளாகிறது.


இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்கள் மற்றும் எங்கள் பகுதியான திருச்சி கரூர் பகுதிகளில் எல்லாம் பள்ளர் இன மக்களிடம் நிலம் உள்ளது. வட பகுதி மாவட்டங்களான ஆற்காடு கடலூர் விழுப்புரம் பகுதிகளில் எல்லாம் பறையர் அல்லது ஆதிதிராவிடர் என குறிக்கப்படும் இன மக்களிடம் நிலம் உள்ளது. இதனாலேயே இவர்கள் இருவராலும் அரசியல் இயக்கங்களை முன்னெடுத்துச்செல்ல முடிகிறது. இந்தப்பகுதிகளில் உள்ள தம்மை ஆதிக்கசாதியினராக கருதிக்கொள்ளும் சாதியினரிடம் போராட்ட குணத்தோடு எதிர்த்து நிற்க முடிவதற்கு ஆதரவாக இருப்பது ஒரளவிலான அவ்ர்களின் பொருளாதார சுயசார்புதான். நிலமே இல்லாத கூலிகளாகவே அடிமைகளாகவே காலத்தை கழிக்கிற சக்கிலிய இன மக்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களால் நிமிரவே முடிவதில்லை. இந்த நிலையில் இந்த மூன்று மக்களையும் இணைக்கிற விதமாக எந்த தாழ்தப்பட்டவர்களின் அரசியல் இயக்கமும் தம்து செயல் நோக்கை வைத்துக்கொள்வதில்லை. காரணம் அவர்களுக்குள்ள சாதிய பற்றுதான்.
இந்த நிலையில் எந்தச் சாதியானாலும் ஒடுக்கப்படுகிற எல்லா மக்களையும் இணைக்கிற ஒரு குடை உன்டென்றால் அது வர்க்கம் சார்ந்த போராட்டம் தான். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான அரசியல் இயக்கங்கள் போராடி உரிமைகளைப்பெறுவதாக கருதினாலும் அது அவர்களின் ஒரு சாராருக்கே முன்னேற்றம் தரும். இட ஒதுக்கீட்டில் படித்து அதிலேயே வேலை வாங்கி நகர்ப்புறங்களில் வசதியான வாழ்வோடு தமது சாதிய அடையாளங்களை வசதியாக மறந்து விடுகிற ஒரு வர்க்கம் உருவாகி விட்டது. இந்த விபத்து தான் சாதிய ஒழிப்புப் போராட்டங்களின் முதல் சறுக்கல். சாதிய ஒழிப்பு என்பது ஒரு சாதியினருக்கு உரிமைகள் பெற்றுத்தருவதோ சமூகத்தில் அவர்களின் மதிப்பைக் கூட்டுவதோ அல்ல. சாதியை மறைப்பதாலேயோ ம்றுப்பதாலேயொ சாதி ஒழிந்து விடப்போவதில்லை. வர்க்கங்கள் ஒழிகின்ற போதுதான் சாதி ஒழியும். வர்க்கங்கள் ஒன்று என்றாகிற போது சாதியே அங்கே இருக்காது. மதமும் தேவை இல்லை. தோழர் லெனின் சோவியத்தை நிர்மாணித்த பின்னர் சர்ச்சுகளையா கொளுத்தினார்? எல்லம் சமம் என்கிற ஒரு பொன்னுலகை படைத்து முன்னால் காட்டும் போது அவர்கள் அதுகாறும் நம்பி வந்த கடவுள் சாதி மதம் என்ற அடையாளங்கள் தேவையற்றுப்போகும்.

திராவிடத்தால் வாழ்கிறோம்


திராவிடத்தால் வாழ்கிறோம்
-மணி ஜெயப்பிரகாஷ்வேல்
கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு மிக கடுமையான நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. ஆளும் பாஜக அரசு ’தேவ’பலத்தில் உள்ளது. அது தனது பக்கச்சார்பான நிலைப்பாட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்திக்கொண்டே வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்துத்துவா என்ற கருத்தியலும் முன்னெப்போதை விடவும் கடுமுனைப்பாக தளம் அமைத்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த சில ஆண்டுகளாக திராவிடக் கருத்தியல் மீண்டும் மறுதேவைக்கு வந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் முன்னதாக, எந்த நோக்கங்களுக்காக திராவிட இயக்கம் தோன்றியதே அதே நோக்கங்களுக்காக இப்போதும், திராவிட இயக்கம் வலுப்பெற்று வருகிறது. 1967 என்ற வரலாற்று ஆண்டுக்குப் பிறகு திராவிட இயக்கத்தின் அங்கமான திமுக அரசதிகாரத்திலும் பங்கேற்று வந்துள்ளது. இன்றைக்கு மத அடிப்படைவாதமும், மத அடிப்படையிலான போலித்தேசியவாதமும் நாட்டின் ஒற்றுமைக்கு சவால் விடுகிற வகையிலான அபாயகரமான சூழலில் மாற்று அரசியல் சக்திகள் வலுப்பெறவும் ஒன்றினையவும் காலம் கனிந்துள்ளது.இன்றைய சூழலில் எல்லா கருத்தியல்களையும் இந்துதுவா உள்வாங்கி தனக்குள் செரித்து வருகிறது. பவுத்தம், சமணம், தமிழ்த்தேசியம், தலித்தியம், அம்பேத்கர், பகத்சிங் என எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ளும் முனைப்பில் அது ஈடுபட்டிருக்கும் போது ஒரு ஒருக்காலும் இணக்கம் காணமுடியாத, சொந்தம் கொண்டாட முடியாத கருத்தியல் திராவிடம் ஆகும். ஒருக்காலும் இந்துத்துவ பெரியார் என்று உரிமை கொண்டாடிவிட முடியாது. ஆகவே திராவிடம் என்ற கருத்தியல் தற்போதைய சூழலில் இந்துத்துவத்தை எதிர்க்க மக்களுக்கு இருக்கும் தெரிவு என்பதை சுபகுணராஜன் கோடி காட்டிவிட்டுத்தான் திராவிட அரசியல் வரலாற்றுச்சுவடுகள் என்ற கருத்தரங்கை (செப்டம்பர் 29-30, 2018) சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் துவக்கி வைத்தார். சென்னையில் சுமார் 18 ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன். சில திரையிடல்களைத்தவிர அனைத்து நிகழ்ச்சிகளும் கட்டணம் ஏதுமின்றித்தான் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுக்கு பங்கேற்பு கட்டணம் கட்டி கலந்து கொண்டது ஆச்சர்யமாக இருந்தது. துறைசார்ந்த கருத்தரங்குகளில் பங்கேற்பு கட்டணம் கட்டுவது வழக்கமான நடைமுறை. அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. கருத்தரங்கு சரியான நேரத்துக்கு தொடங்கப்பட்டது. நேரவரையறை சற்றேரக்குறைய மிகச்சரியாக பின்பற்றப்பட்டது. கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் மற்றும் சிறப்புரையாளர்கள் பலரும் கல்விப்புலம் சார்ந்தவர்கள் என்பதால் நிகழ்வில் அதிகம் எதிர்பார்த்துதான் போனேன். ஒரே ஒரு உரையைத்தவிர மற்ற அத்தனை உரைகளையும் முழுதாகக் கேட்டேன். தமிழில் இப்படி ஆய்வியல் நோக்கிலான கருத்தரங்கில் முதன் முதலாக பங்கேற்றேன். ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருந்தது.
சமீபகாலத்தில் திராவிடம் 2.0, திராவிடச்சிறகுகள், திராவிடச்சுவடுகள் என்று தொடர்ச்சியாக புதியவர்கள் முன்னெடுக்கும், பங்கெடுக்கும் வெகுஜனதளத்திலான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல திராவிடக்கருத்தாளர்களும் திராவிடத்தின் கூறுகளை, திராவிட அரசியலின் தேவையை, திராவிட அரசுகளின் பொருத்தப்பாட்டை வெகுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அவை பெரும்பாலும் பெரியார்-அண்ணா-கலைஞர் போன்ற ஆளுமைகளை ஒட்டியும் திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் போன்ற சமகால இழுத்தடிப்புகளுக்கு பதில் சொல்வதாயும் அமைந்து வருகின்றன. அந்த எல்லைகளைத்தாண்டி இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு கருத்தியல் ரீதியிலான தரவுகளை அளிக்கக்கூடிய மிக முக்கியமான நிகழ்வாக திராவிட அரசியல் வரலாற்றுச்சுவடுகள் என்ற கருத்தரங்கை நான் அவதானிக்கிறேன். டெல்லியைத்தொடர்ந்து இங்கேயும் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கள் திராவிட அரசியலின் மறுமலர்ச்சிக்கு கருத்தியல் அடித்தளம் என்ற முறையிலும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். சமூகவியல், மானுடவியல் மற்றும் வரலாற்றுக்கோட்பாடுகளின் அடிப்படையில்
முதல்நாளின் முதலாம் அமர்வு தமிழ்ச்சமூகத்தில் திராவிட இயக்கங்கள் உருவாக்கிய சமூக மறுகட்டமைப்பை விவாதித்தது. இரண்டாவது அமர்வு சமூகநீதியினை முன்வைத்து கல்வித்தளத்தில் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விவாதித்தது. முதல்நாளின் மூன்றாம் அமர்வு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் திராவிட இயக்கச் செயல்பாடுகளை முன்வைத்தது. திராவிட இயக்கங்கள் இடைநிலைச்சாதிகளிடம் அதிகாரத்தைக்கொடுத்து விட்டன என்பதை மாற்றும் விதமாக இந்த அமர்வு இருந்தது.  இரண்டாம் நாளில் நிகழ்ந்த நான்காம் அமர்வு திராவிட இயக்கத்தின் அடிப்படைக்கொள்கைகளையும் குறிப்பாக சமதர்ம சமூகநீதி மற்றும் பெண்களுக்கான தளங்களில் திராவிட இயக்கத்தின் தடங்களையும் எடுத்துக்காட்டியது. ஐந்தாம் அமர்வு மிக முக்கியமானது. வெறும் மேலெழுந்தவாரியாக அரசியல் உதாரணங்களாலும் சில ஆழமான கருத்தியல் கோட்பாடுகளாலும் விளக்கப்பட்ட திராவிட இயக்கங்கள் சமூக-பொருளாதரக் கட்டமைப்பில் திட்டமிட்டு நிகழ்த்திய பாய்ச்சலை பொருளாதாரா அளவீடுகள் மூலமாகவும் சமூகக்கட்டமைப்பில் நிகழ்ந்துள்ள நேரடியான முன்னேற்றங்களைக் எடுத்துக்காட்டியும், திராவிட இயக்கங்களால் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள சமூக பொருளாதார முன்னேற்றங்கள் காக்கை உட்கார விழுந்த பனம்பழம் அல்ல என்று விளக்கியது. ஆறாம் மற்றும் இறுதி அமர்வாக திராவிட இயக்கங்களின் பன்மை அடையாளம் மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களை முன்வைத்தது.
ஒவ்வொரு அமர்விலும் வழங்கப்பட்ட உரைகளை தனித்தனியாகவே எழுத வேண்டும். ஆனால் இந்தக் கருத்தரங்கு மொத்தமாக எனக்குக்கொடுத்த அனுமானத்தை மட்டும் மிகச்சுருக்கமாக பதிவு செய்கிறேன். திராவிட இயக்கம் என்பது ஒரு அடிப்படைப்பிடிப்பற்ற சந்தர்ப்பவாத இயக்கம்; திராவிடம் என்ற கருத்தியலே சான்றுகள் இல்லாத வசதிக்காக கட்டமைக்கப்பட்ட கருத்தியல் போன்ற மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளையும், திராவிட இயக்கங்களை, ஊழல், தேர்தல் கணக்குகள் போன்ற நடைமுறைக்காரணங்களை சொல்லி ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதையும் இந்தக் கருத்தரங்கு அடித்து நொறுக்கியுள்ளது. திராவிடம் என்றக் கருத்தியல் வெறும் பெயர்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அடிப்படைப் பெருமிதங்களுல் ஒன்றாக நிலைபெற்று விட்டது. நாட்டின் மற்றெல்லா பகுதிகளிலும் சமீபகாலங்களாக உணர்ந்து வரும் சில அடிப்படை உரிமைகளையும் திராவிட இயங்கங்களும், குறிப்பாக அதன் அரசியல் அலகுகளான திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பாகவே அறிந்து தமது அரசியல் வியூகங்களை வகுத்துக்கொண்டுள்ளனர். அதற்கும் மேலாக ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வது என்பதைத்தாண்டி தமிழகம் என்ற தனிப்பெரும் கலாச்சாரப்பரப்பின் தொன்மை அடையாளங்களைக் காத்தும், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதர முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்டும், சமூகநீதியையும் சமதர்மத்தையும் பெண்விடுதலையையும் முன்னெடுத்தும் தடம் பதிக்கும் திராவிட இயக்க அமைப்புகள் தாங்கிப்பிடிக்க வேண்டியன. திமுக போன்ற திராவிட இயக்க அரசியல் அலகுகள் இந்தக் கருத்தரங்கை தமது வெகுஜன அரசியல்லுக்கான கருத்தியல் அடித்தளமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். என்னளவில் திராவிடம் என்பது சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு கருத்தியல் அடிப்படையும், அரசியல் தெளிவும், நடைமுறை பயன்களும் மிக்கதொரு வெற்றிகரமான கருத்தியல் என்றே நான் பார்க்கிறேன்.