வியாழன், 27 ஏப்ரல், 2017

சினிமா ஒரு மிகப்பெரும் ராட்சச மிருகம்



சினிமாவை காட்சி இலக்கியம் என்பதையோ அது பல கலைகளின் கூடாரம் என்பதையோ நானும் மறுக்கவில்லை. பலகாலமாக நம்பிக்கொண்டும் இருக்கிறேன். இங்கே நான் சொல்வது அது அல்ல. சாரு ஒழிவு திவசத்தே களி பற்றி எழுதும்போது அது ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இலக்கிய தொடர்பு இருப்பதாலேயே அது நல்ல படமாகிறது என்றார். மிஷ்கின் பாலு மஹேந்திரா இவர்கள் தன் உதவியாளர்களை அவர்களின் வாசிப்பு இலக்கிய அறிவு சார்ந்தே எடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை இங்கே இலக்கியம் என்று சொல்லப்படுகிற எழுதப்பட்ட வகைகளுக்கு அப்படி ஒரு புனித அளவீடு தேவை இல்லை. அற்புதமான பல படங்கள் உள்ளன. இலக்கியப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்படாத பல படங்கள் உள்ளன. சினிமா எடுப்பவர்கள் மட்டுமல்ல. எல்லா மனிதர்களுக்கும் இலக்கிய பரிச்சயம் அவசியம் தேவை. ஆனால் படத்தின் தகுதியை அதன் இலக்கியத்தொடர்போடு முடிச்சு போடுவது சரியல்ல. இங்கே பல இலக்கியவாதிகள் பிற கலை அனுபவங்களோடு , அரசியல் போக்கோடு தொடர்பே இல்லாமல் இருக்கின்றனர். இலக்கீயவாதிகளுக்கு பொறுப்பு ஒரு பரந்த தளத்தில் உள்ளது. அதே பொறுப்பு சினிமாக்காரர்களுக்கும் உண்டு. நான் சொல்ல வருவது ஒரு நுண்ணிய வேறுபாடு. இலக்கியத்தின் தேவை குறித்தல்ல. அதை மட்டுமே ஒரு அளவீட்டுத்தகுதியாக வைக்கக் கூடாது.

மாற்று சினிமா லோ பட்ஜெட் சினிமா டெக்னிகலாக மட்டமாக இருக்கும் என்றும் இலக்கியத்தொடர்பு உள்ள ஒழிவு திவசத்தே களி இலக்கியத்தொடர்பாலேயே தொழில்நுட்ப பூர்வமாகவும் கலாபூர்வமாகவும் சிறந்த படமாகிறது என்கிறார் சாரு. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சினிமாவில் நுழைந்து தோற்றுப்போன அல்லது தடம் பதிக்காத (சினிமாவில்) இலக்கியப்புலிகள் ஏராளம். ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்ரா இப்படி. எல்லாரும் எம்.டி. வாசுதேவன் நாயர் ஆகிவிட முடியாது. பாபாவுக்கும் சண்டைக்கோழிக்கும் வசனம் எழுத எஸ்ரா எதுக்கு? எஸ் ரா எழுதியதால் அந்தப் படங்கள் கலையுச்சம் பெற்று விட்டனவா? மதுபானக் கடை என்ற எளிமையான படம் கொடுக்கும் அனுபவம் கூட இவர்களால் தர முடிவதில்லை

சினிமா ஒரு மிகப்ப்பெரும் ராட்சச மிருகம். அதனோடு சவாரி செய்ய இலக்கியம் மட்டுமே போதுமானதல்ல.

குளிர்காலப் பதிவு

2002 நவம்பர் மாத இறுதியில் பரத் மற்றும் கார்த்திக் அண்ணாவுடன் ஆய்வுப்பணி நிமித்தமாக பல வடமாநிலங்களுக்கும் போகும் வாய்ப்பு கிடைத்தது. இமாச்சல் பிரதேஷ் பலம்பூரில் இருந்து கடுமையான பனிப்பொழிவு மிக்க ரொதாங்பாஸ் வழியாக திரும்பினோம். பெரும்பாலான இடங்களில் கடும் பனி. இருந்தாலும் சமாளித்தோம். பலம்பூர் போகும் போது எதோ ஒரு இடத்தில் இரவு பேருந்து நின்று விட உள்ளூர் மக்களுடன் குளிர் காய்ந்தெல்லாம் பயணித்தோம். அப்போது குளிர் பெரிதாக வாட்டிவிடவில்லை
2003 இறுதியில் வால்பாறையில் வேலைக்குச் சேர்ந்தேன். சராசரியாக காலை நேர வெப்பநிலை 3-5 டிகிரிக்குள் இருக்கும் இடம் அது. ஆய்வகம் இன்னும் தாழ இருந்தது. காலை எட்டரை மணிக்கெல்லாம் உள்ளே இருக்க வேண்டும். ஆறு ஐம்பதுக்கு நீரார் அணைப் பேருந்து வரும். அப்போது கரும்பாலம் அருகில் தங்கியிருந்தோம். பாலாதான் முதலில் எழுந்து கிணற்றில் நீரிறைத்து சுட வைத்து குளித்து விட்டு பிறகு   மற்றவர்களை எழுப்புவார். ஆனால் நானும் சவுமிக்கும் பெரும்பாலும் பேருந்தை பிடிக்க முடியாத படிக்கு தாமதமாகத்தான் சேருவோம். அடுத்த வண்டி ஈட்டியார் வரைதான் போகும். அதைத்தான் பெரும்பாலான நாட்கள் பிடிப்போம். ஈட்டியார் பேருந்து நிறுத்த மலை முகட்டின் மேலிருக்கும் தேநீர்க்கடையில் கடுந்தேநீர் அருந்திவிட்டு இருவரும் நடப்போம். குறைந்தது நான்கு கிலோமீட்டர்கள். அப்போது குளிர் பெரிதாக தெரியவில்லை.
நெருஞ்சி இலக்கிய முற்றம் அப்போது கோவை சிபி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதக்கூட்டம் போடுவார்கள். அங்கேதான் பீ முதலான சில முக்கிய ஆவணப்படங்களைப் பார்க்க வாய்த்தது. ஒரு நாளில் நான் கூட ஒரு கவிதை வாசித்தேன். அந்தக் கூட்டத்தை பெரும்பாலும் தவற விட்டதில்லை. ஆனால் முடித்து விட்டு திரும்பும் போது உக்கடத்தில் இருந்து கடைசிப்பேருந்து தான் இருக்கும். போய்சேர இரவு பனிரெண்டுக்கு சமீபம் ஆகும். அந்தக் குளிரும் பெரிதாக தெரியவில்லை.
ஊருக்குப் போய் திரும்பும் வாரங்களில் ஊமாண்டி முடக்கு அருகே காலை நாலுமணிக்கு தேநீர் குடிக்க பேருந்தை நிறுத்துவார்கள். குளிரையும் சேர்த்தே அனுபவித்து அருந்திய நேரங்கள் அவை.

நேற்று மீண்டெழும் சென்னைக்கான பொங்கல் விழாவினைப் (கண்ணம்மா பேட்டை) பார்த்து விட்டு தோழர் கிருஷ்ணராஜ் அவர்களுடம் திரும்பும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. கோட்டூர்புரம் அண்ணன் துரைமுருகன் வீட்டுக்கு அருகே உள்ள தேநீர்கடையில் கடைசித் தேநீரை அருந்தி பேச்க்கொண்டிருந்து விட்டு கிளம்பும் போது பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. கடுமையான குளிர். கர்சீப் ஹெல்மெட் எல்லாம் தாண்டி குளிர் ஊடுருவ வண்டியை உருட்ட வேண்டியதாயிற்று. உண்மையில் சமாளிக்க முடியாத அளவு குளிர்.ஒருவேளை எல் நினோ / லா நினா காரணமா? அல்லது வயதாகிவிட்டதா................?

சென்னை வெள்ளம் டிசம்பர் 2015 பகுதி 1

டிசம்பர் 2ம் தேதி தெருவை விட்டுக்கூட வெளியே வரமுடியாத நிலை. சற்றேரக்குறைய அனைத்து விஞ்ஞான சாதனங்களும் உபயோகமில்லாமல் இருந்தன. முதல் நாளில் சேமித்திருந்த நீரனைத்தும் தீர்ந்து போனது. அந்த நாட்களில் எல்லாம் செவிவழிச் செய்திகளே தொடர்பு சாதனம். அப்படி ஒரு செய்தியாக சில தெருக்கள் தள்ளி ஒரு அடிபம்பு இருப்பதாகவும் தண்ணீர் வருவதாகவும் தகவல். எல்லோரும் அங்கே போய் வெகு ஒழுக்கமான வரிசையில் நின்று யாருடனும் எந்த சண்டையும் இல்லாமல் தண்ணீர் பிடித்து வந்தோம். வீட்டில் நல்லெண்ணெய் அகல் விளக்கு வெளிச்சத்தில் சமையலும் சாப்பாடும். மொத்தத்தில் உயிர் வாழ்வதற்கான அடிப்படைக் கடமைகள் மட்டுமே அப்போது  மனதை ஆக்ரமித்திருந்தது. ஒரு உயிரின் கடமை அதுதானே. மனிதன் இன்னமும் அடிப்படையில் உயிர் பிழைத்திருக்கப் போராடும் உணர்வுள்ள ஒரு விலங்குதான் என்பது உறுதியானது. அந்த நாட்களில் கேளிப்பட்ட எந்த தகவல்களும் ஆரோக்யமானதாக இல்லை. வீட்டில் இருப்பதே உத்தமம் என்றானது அடுத்த தெருவுக்கு கூட  போக முடியாத அளவு அனைத்து புறங்களிலும் தண்ணீர். அந்த ஏரி உடைந்தது இந்த ஏரி உடைந்தது என்று வதந்திகள் வேறு. சில தெருக்கள் தள்ளித்தான் தங்கையின் வீடு. இரண்டு நாட்களாக எந்த தொடர்பும் இல்லை. எந்த தெருக்களில் எவ்வளவு தண்ணீர் என்பதும் தெரியவில்லை. என்றாலும் வெள்ளத்தின் இரண்டாம் நாள் தங்கையின் வீட்டுக்குப் போய்ப் பார்த்து விடுவது என்று கிளம்பினேன். 1977 வருட அமராவதி நதியின் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அம்மாவின் கதைகள் எங்களது குடும்பத்தின் எல்லா கதை நேரங்களிலும் இருக்கும். அதெல்லாம் மனதில் ஓட ஒவ்வொரு தெருவாக கிழக்கு நோஒக்கி நடந்தேன் (கிழக்கே தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். அங்கே வழிந்த நீர்தான் இங்கே வெள்ளம்). முதல் தெருவில் முழங்கால் அளவு…. இரண்டாம் தெருவில் தொடை அளவு…. அதற்குப் பின் இடுப்பளவு…. தங்கை இருக்கும் தெருவுக்கு போகும் போது நெஞ்சளவு வந்து விட்டது நீச்சலடிக்கவும் ஆயத்தாகத்தான் போனேன். ஆனால் தேவை ஏற்பட வில்லை. ஒவ்வொரு தெருவிலும் மாடியில் மட்டுமே ஆட்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தனியே நடந்தேன். அனைவரும் கேட்ட கேள்வி எங்கேயிருந்து வரீங்க... சிலர் கேட்டார்கள் மருந்து கடை திறந்திருக்கா... காய்கறி எங்கே கிடைக்குது...பால் கிடைக்குதா... போட் ஏதும் வருதா.......கடைகள் இருக்கா..... பதில்களும் புன்னகையுமாக ஒரு வழியாக தங்கையின் வீட்டுக்குப் போனேன். மாடியில் இருந்தார்கள். போட்டில் பாலும் சாப்பாடும் வந்ததாம். அடுக்ககத்தின் அனைத்து குழந்தைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்; வெள்ளத்தை முழுமையாக அனுபவித்தபடி.
. ஜெயப்பிரகாஷ்வேல்

மடிப்பாக்கம், சென்னை

வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம் -1

நேற்று இரவு போராட்டம் நடக்கும் மெரினாவுக்குச் சென்றிருந்தேன் நண்பர்கள் உடன். தமிழர் என்ற வார்த்தை அல்லது ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை அங்கே தமிழர்களை மட்டும் அல்ல. இங்கே இருக்கும் பலரையும் அது ஒன்றிணைத்து இருக்கிறது. இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் அல்ல. அது ஒரு குறியீடு. எல்லா பிரச்சனைகளிலும் பேச வாய்ப்பு இல்லாதவர்கள் இப்போது பேசுகிறார்கள். முடிவு எப்படியாகினும் பிரச்சனைகளைப் பேசுவதே பெரிய மாற்றத்துக்கான ஆரம்பம்.
என்.டி.டி.வி இணையதளத்தில் வியாழன் பார்த்தபோது 3000 பேர் மெரீனாவில் போராடுகிறார்கள் என்றது. நேற்று இரவு சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையத்தில் நின்றவர்கள் மட்டும் ஆயிரம் பேர் இருக்கும். மெரீனாவின் மொத்த நீளத்துக்கும் மக்கள் தலைதான்.
குடும்பத்துடன் எதோ கோயிலுக்கு போவது போல மக்கள் தம் கைகளில் எதிர்ப்பு வாசகங்களை ஏந்திப் போகிறார்கள். நான் பார்த்த அத்தனை ஆயிரம்முகங்களிலும் உண்மையான நம்பிக்கையைப் பார்த்தேன். இது நடக்குமா நடக்காதா என்ற வாதத்தைத்தாண்டு நடக்க வேண்டும் என்ற உறுதியையே அங்கே அதிகம் பார்த்தேன். உண்மையில் குப்பைகளை பொறுக்குகிறார்கள். குப்பைக்கூடைகளில் போடுகிறார்கள். பெண்கள் சர்வ சுதந்திரமாக நடக்கிறார்கள்; முழங்குகிறார்கள்; நடனமாடுகிறார்கள். அனைத்துப் பெண்களைட்யும் தம் வீட்டுப் பெண்களாக கவனிக்கிறார்கள்.
மக்கள் பாடகர் தோழர் கோவன் தன் பாடல்களாலும் குழுவின் வசனங்களாலும் அங்கே ஒரு கலை இரவை நடத்திக்கொண்டிருந்தார். 100 அடிக்கு ஒரு பறையிசைக்குழு அல்லது தன்யே ஒரு பறை என இசை அங்கே முழங்குகிறது. ஒவ்வோரு ரயில் நிலையமும் வழிகிறது. முழக்கங்கள் பிளக்கிறது.
ஒரு கொண்டாட்ட மனநிலையிலான இந்தப் போராட்டத்தை நிறுத்துவது மிக கடினம். 100 பேர் வீட்டுக்குப்போனால் 300 பேர் புதிதாக வருகிறார்கள். அங்கங்கே சிறு சிறு குழுக்கலாக போராடுகிறார்கள்.
உண்மையில் நாம் வாழும் காலத்தின் மகத்தான தருணங்களில் இதுவும் ஒன்று. இந்த நாட்களில் சென்னையில் இருந்தேன் என்பது என் பெருமிதங்களில் ஒன்று.
அனைவருக்கும் வாழ்த்துகள். .