வியாழன், 30 ஜூன், 2016


இந்தியர்களுக்கு காப்பி-பேஸ்ட் செய்யக் கற்றுக்கொடுப்பதை நிறுத்துங்கள்-அனுராக் சவுராசியா

http://www.nature.com/news/stop-teaching-indians-to-copy-and-paste-1.20157

இன்று வெகு நாட்களுக்குப் பிறகு எனது முதல் அறிவியல் ஆசான் மேடம் ஞானமணி அவர்களை சந்தித்தேன். முதன் முதலாக நானும் தமிழகத்தின் ராபர்ட் டி நீரோ Balram Jeyapaul Narayanan அவர்களும் மேடத்தின் ஆய்வகத்தில் எம்.எஸ்.சி ஆய்வுக்காக போன போது சுமார் மூன்று நாட்கள் வரும்படியான கண்ணாடித்தளவாடங்களைக்கொடுத்து கழுவி வைக்கச் சொன்ன முதல் நாள் அன்று எப்படி பேசினார்களோ அதே இணக்கத்தோடு இப்போதும் பேசுவார். பேச்சினூடே இன்றைய மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வம் இந்திய அறிவியலின் போக்கு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் பின்காணும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கக் கொடுத்தார். இரண்டு வரிகள் படித்ததுமே என் கருத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். முழுசா படிச்சிட்டு சொல்லுன்னாங்க. முழுசா படிச்சப்புறம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த மாத ஆரம்பத்தில் நண்பர்Ramesh Subramani (ஃபிஜியில் வேலை செய்கிறார்) சென்னை வந்திருந்த போது சொன்னார் “ வெளிநாடுகளில் இந்திய அறிவியலாளர்களின் மீது மரியாதை போய்விட்டது; சந்தேகம் தான் அதிகமாகிறது. மிக அதிக மதிப்புள்ள ஜர்னல்களில் பேப்பர் போட்டாலும் நம்புவது கடினம் என்றார்.
அதையேதான் திரு அனுராக் சவுராசியா (http://nbaim.academia.edu/Anuragchaurasia) சமீபத்திய நேச்சர் இதழில் எழுதி இருக்கிறார். (அனுராக் சவுராசியா- உலக வங்கி நிதியுதவிய ஆய்வுத்திட்டத்தில் இந்தியாவில் முதன்முறையாக பி.டி. கத்தரிக்காய், தக்காளி முதலியவற்றை இந்தியாவில் உருவாக்கிய குழு மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள ஆய்வுகளை முறைப்படுத்தும் வழிமுறைகளை உறுதிப்படுத்தியது மற்றும் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள ஆய்வை நடத்திய குழு இவற்றில் முக்கிய பங்கு வகித்தவர்). 2005இல் இவர் முன்நின்று ஆரம்பித்த வேளாண்முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர்களுக்கான தேசிய மையத்திற்கு எனது பி.எச்.டிக்காக நான் வளர்த்த- தெரிந்தெடுத்த சில அருமையான பாக்டீரியாக்களையும் வழங்கி இருக்கிறோம்)
அவரின் பிற பின்புலங்களைத்தவிர்த்து இந்த குறிப்பிட்ட கட்டுரையில் ”இந்தியர்களுக்கு காப்பி-பேஸ்ட் செய்யக் கற்றுக்கொடுப்பதை நிறுத்துங்கள்” என்கிறார். தனது மகன் தேர்வில் சுயமாக எழுதியது புத்தகத்தில் உள்ளது போல இல்லை என்பதால் மதிப்பெண் குறைக்கப்பட்டார் என்று ஆரம்பிக்கிறார். உண்மைதான். பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் மாணவர்களை தேர்வுக்குத்தான் தயார் படுத்துகின்றன. அரிதாக வெகு சில வாத்யார்களே மாணவர்கள் சுயமாக எழுதுவதை படித்துப்பார்க்கும் நேரத்தையும் அதை அங்கீகரிக்கும் முதிர்ச்சியையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பள்ளிகளில் இப்படி ஆரம்பிக்கும் பண்பாடானது ஆய்வுக்கட்டுரைகளை கட்/காப்பி-பேஸ்ட் செய்யும் வரை கொண்டு போய் விடுகிறது என்கிறார். அதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை எனவும் சொல்கிறார். தேசிய அளவில் நடந்த நமது கல்வி முறை குறித்து மிக ஆழமான பரிசீலனையும் அதன் பரிந்துரைகளும் விரைந்து செயல்படுத்த மிக அவசியமான தருணத்தில் உள்ளோம் என்கிறார். எல்லோரும் இன்று கல்வி முறை குறித்த விரக்தியில் தான் உள்ளோம். என்றாலும் எடுத்துச் சொரிய நல்ல கொள்ளிகள் நமக்கு நிறைய இல்லை.
மேலும் சொல்கிறார்;
1. திருடி எழுதுவது என்பது மிகவும் சகஜமாகிவிட்டது (உதாரணத்துக்கு சிலவற்றைச் சுட்டுகிறார்கள். அதில் சுட்டப்படுபவர்கள் தேசத்தின் பெரிய கல்விமான்கள்)
2. திருடி எழுதி மாட்டிக்கொண்டால் அதிகபட்ச தண்டனை “ இனி செய்யாதே....”
3. ஆய்வுக்கட்டுரைகள்; ஆய்வுத்திட்ட அறிக்கைகள்; ஆய்வுத்திட்ட முன்வரைவுகள் என எல்லாவற்றிலும் காப்பியடிப்பது சகஜமாகி விட்டது.
4. இப்படியான செய்கைகளுக்குப் பின்னும் கூட டாப்200 ரேங்க் கில் எந்த இந்தியப்பல்கலைக்கழகமோ ஆய்வு நிறுவனமோ இல்லை. இந்தியா கொண்டிருக்கும் கனவுக்கும் மனிதவளத்துக்கும் இது ஆரோக்யமானதல்ல
5. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அறிவியல் என்றாலே கேள்விக்கு பதில் சொல்வது என்கிற மட்டத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள்
இதை மாற்ற நமது கல்விமுறையில் மிகப்பெரும் மாற்றம் தேவை என்கிறார். பள்ளிக்கல்வியில் கொண்டு வரப்படும் மாற்றம் இந்திய அறிவியல் துறையின் போதாமையை கவனத்தில் கொண்டு துரிதமாக்கப்பட வேண்டும் என்கிறார்.
மிக நல்ல ஆராய்ச்சியாளர்கள் கோப்புகளை சரிபார்க்கும் நிர்வாக ஊழியர்களாக நம் தேசத்தில் மாறுகிறார்கள் அல்லது மாற்றப்படுகிறார்கள் என்கிறார். மிக நல்ல என்று இல்லாவிட்டலும் உண்மையாலுமே ஆய்வுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று அரைகுறை அறிவோடு பி.எச்.டி முடித்த எனக்கு இப்படியான நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. சிலர் பி.பி.ஓ. வேலை செய்கிறார்கள். சிலர் விவசாயம் செய்கிறார்கள். சிலர் ஹோம் மேக்கர்களாக இருக்கிறார்கள்; சிலர் வியாபாரமும் செய்கிறார்கள். என்னமும் செய்யட்டும். இப்படியான நிறைய பேர் வெளிநாடுகளுக்கும் போய் விட்டார்கள். ஆனால் அனைவரும் அறிவியல் ஆய்வு செய்ய வேண்டியவர்கள் என்பது நினைவில் வேண்டும்.
அனுராக் சொல்வது போல இந்த தேசத்தில் இதற்கு முன் சுய சிந்தனையாளர்களுக்கும், சுயமான படைப்பாளிகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை.
இப்பொதைக்குப் பரவாயில்லை.இன்னும் பத்தாண்டுகளுக்கு இதே நிலை நீடித்தால் நாட்டில் திறைமைக்கு பெரிய பஞ்சம் ஏற்படும். ராக்கெட்டெல்லாம் விடுகிறோம். ஊர் ஊருக்கு சுரங்கம் வெட்டி அதனுள் குதிரைப்பயணம் செய்த ஒரு தேசத்தில் மெட்ரோ ரயிலுக்கு சுரங்கம் வெட்ட சீனாவிடம் நுட்பம் கேட்கிறோம்.
Krishnaraj Mannangattiஅவர்கள் எனக்கு சில சித்தர் பாடல்களைக் கொடுத்தார். ஆயிரக்கணக்கில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூத்திரம். சூரணம் செய்ய குளிகை செய்ய. ஆனால் தற்போது ரிவர்ஸ் எஞ்சினியரிங் என்று இந்திய பார்மா உலகம் கையேந்தி நிற்கிறது.
மிகப்பெரும் அளவிலான மிகச் சீக்கிரமாக நமது கல்விமுறையை குறிப்பாக பள்ளிக்கல்வி முறையை மாற்ற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எண்ணெய் எடுக்கும் நுட்பம் தெரியாததால் தான் அரபிகள் மேல்நாடுகளிடம் ஏமாந்து எண்ணெயை தாரை வார்த்துள்ளன. அப்படியான நிலை இங்கே வரும் முன்பாக கல்விமுறையை மாற்ற வேண்டும். நடக்குமா?
http://www.nature.com/news/stop-teaching-indians-to-copy-and-paste-1.20157

திங்கள், 27 ஜூன், 2016

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சங்கத்தமிழுக்கு ஒரு இருக்கை


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சங்கத்தமிழுக்கு ஒரு இருக்கை அனுமதிக்க நிதி திரட்டி வருகிறார்கள். இரு அமெரிக்க வாழ் மருத்துவர்கள் (தமிழர்கள்) முன்னின்றும் முதல் நிதியாக மூன்று கோடி போட்டும் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கான அறிமுகக்கூட்டம் தியாகராயர் அரங்கில் சனிக்கிழமை சாயுங்காலம் நடைபெற்றது.விழாவில் தமிழில் பிழைப்பு நடத்தும் பிரபலஸ்தர்கள் யாரும் இல்லை. வழக்கமான இலக்கிய கூட்டங்களில் காணக்கிடைக்கும் அரைவேக்காடுகளும் கண்ணில் படவில்லை. தாஜ்நூர் இசையில் பழனிபாரதின் பாடல் ஒன்றை தீம் இசை என வெளியிட்டார்க்ள். மிகவும் சுமாரான ஆல்பம் அது. சுமார் கூட அதிகம் தான்.
ஞாநி அவர்கள் “ஹார்வர்டில் தமிழ் இருக்கை: இங்கே அம்மணம். அங்கே பட்டாடையா?” என்று இந்த முன்னெடுப்பைப்பற்றி விமர்சிக்கிறார். ஞாநி அவர்களின் உள்ளார்ந்த வெறுப்பு புரியவில்லை என்றாலும் நேரிடையாக சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
1. தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் முனைவர் பட்டம் வரை படிக்கிறார்கள்.
2. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் விடுதி மட்டமாக உள்ளது. அங்கே தமிழ் படிக்கும் தலித் மற்றும் வன்னியர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
4. தமிழ் மீடியத்தில் படிப்பவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் இல்லை.
5. சில பத்திரிக்கைகள் மற்றும் கம்பெனிகளுக்கு இதில் என்ன ஆர்வம்
(அந்தப்பத்திரிக்கை இந்து; கம்பெனி சி.பி.சி.எல் என கணிக்கிறேன்)
6. இங்கே ஒரு 40 கோடி ரூபாய் திரட்டினால், அதைக் கொண்டு முதலில் தமிழுக்கு இங்கேயே செய்யவேண்டிய வேலைகள் ஏராளமாக இருக்கின்றன.
மிகவும் தட்டையான பார்வை இது. ஞாநிக்கு இப்படி தோன்றாமல் போனால் தான் ஆச்சர்யம். எதையும் வளைந்து பின்பக்க்கம் பார்த்து தன் தனித்துவமாகா பேசுவார். பேசட்டும். இந்த 40 கோடி தமிழ் நாட்டில் திரட்டுவதால் என்ன கெட்டுவிடப் போகிறது? கடந்த தேர்தலில் புழங்கிய பணத்தொடு 40 கோடியை ஒப்பிடுங்கள். கடுகு அய்யா கடுகு
தமிழ்நாட்டில் எப்போதும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் தீரட்டும் என்றால் சூரியனும் சந்திரனும் உள்ளவரை காத்திருக்க வேண்டியதுதான். சுனாமி வந்த அன்று சினிமா பார்த்த நாடு இது. வெள்ளம் புகுந்த வீடுகளில் திருடுடிய வீடு இது. நெடுஞ்சாலை விபத்தில் இறந்தவர்களின் நகைகளை திருடும் நாடு இது. எப்போ இதெல்லாம் குறைய............?
வள்ளுவர் கோட்டம் அருகே இன்னமும் பிச்சை எடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அதை கட்டாமல் விட்டிருக்கலாம் என்று சொல்ல முடியுமா? சல்லிப்பயல்களும் சில்லறைத்தனங்களும் இருக்கத்தான் செய்யும் . சிலப்போது சில விஷயங்கள் நடக்கும். சாவு வீட்டில் காப்பி கொடுப்பதில்லையா? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு 40 கோுடி ஒரு காசா ?
இந்த 40 கோடியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிலோ ஈழத்திலோ எள்ளளவு பிரச்சனையை கூடத் தீர்க்க முடியாது. அவர்கள் ஏற்கனவே கட்டிய பயண்பாட்டில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனை ஆக்குவது போல முயன்றால் தப்பு சொல்லலாம். பிசாத்து காசு 40 கோடியில் ஹார்வார்ட் உள்ளவரை ஒரு தமிழ் இருக்கை இருக்கப்போகிறது. யாருமே பேசாத சமஸ்கிருதத்துக்கு கோடிகள் கொட்டும் போது கோடிகள் பேசும் தமிழுக்கு சில கோடிகள் போட்டால் என்ன? இது அரசின் வரிப்பணம் அல்ல. மனமிருப்பவர்கள் கொடுக்கட்டும். அரசும் இதில் உதவ வேண்டும். செய்பவர்களுக்கு பிண்ணனி எப்படியும் இருக்கட்டும். தமிழின் பெயர் இன்னும் சில நூற்றாண்டுகள் அமெரிக்காவில் இருக்கும் இருக்கட்டுமே.
கொடுக்க விருப்பமுள்ளவர்கள் கொடுக்கட்டும். ஹார்வார்டில் தமிழ் இருக்கை இல்லாவிட்டால் இங்கே எல்லாம் சரியாகி விடுமா? எவனோ செய்யறான். எவனோ கொடுக்கறான். தமிழ் இன்னும் கொஞ்ச காலம் அமெரிக்க மண்ணிலும் தழைக்கட்டுமே..........? வரிப்பணத்தில் கட்டிய சட்டசபையை வம்புக்காக மருத்துவமனையாக மாற்றுகிறார்கள். அரசுப்பணத்தில் கட்சிக்கூட்டம் நடக்குது. கட்சி அறிக்கையை செய்திதுறை கொடுக்குது. இப்படியெல்லாம் ஒரு நாட்டில் நடக்குதாம். அதெல்லாம் போலாம் இது போகக்கூடாதா?
முதல் ஐந்து குற்றச்சாட்டுகளும் தமிழக அரசு மீது வைக்க வேண்டியவை. அவை அனைத்தும் அரசு செய்ய வேண்டியன. அதை இப்படி திரட்டப்படும் 40 கோடியில் செய்யலாம் என்கிறார். ஆகவே ஹார்வார்ட் தமிழ் இருக்கை தேவை அல்ல. அல்லது அதற்கு இங்கே நிதி திரட்டாதே என்கிறார்.
பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பரின் பலபத்தாண்டு கடின உழைப்புகளான சினிமா வரலாற்றுப்பதிவுகளை அரசு வாங்கிக் கொண்டது. அதை எப்படி பராமரிக்கிறது? அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எப்படி பராமரிக்கிறது? ரோஜா முத்தையா என்ற தனிநபரின் உழைப்பை சிகாகோ பல்கலையின் நிதியுதவி காப்பாற்றி ரோஜா முத்தையா நூலகம் அமைய உதவியது என்கிறார் இந்து ராம். அப்படி எதாவது நல்லது ஹார்வார்டு இருக்கையாலும் நடக்கும் என்கிறார். அப்படி இருக்க ஒரு இருக்கை தான் அமைந்து விட்டு போகட்டுமே?
இந்த கம்பெனிகளுக்கு, இந்து ராமுக்கோ, அந்த இரு மருத்துவர்களுக்கு அல்லது ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு என்ன ஒரு மறைமுக அஜெண்டாவும் இருந்து விட்டுப் போகட்டும். தமிழ் என்ற வார்த்தை இன்னும் சில நூறாண்டுகள் அமெரிக்க மண்ணில் புழங்குமே அதற்காகவாவது இந்த இருக்கை அமைப்பதை ஆதரிப்போம்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழுக்கு மத்திய மாநில அரசுகள் என்ன செய்தன? யாராவது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு போனீர்களா? அங்கு வேலை செய்யும் பேராசிரியர்கள் என்ன செய்ய முடிகிறது? எத்தனை நூல்களை கொண்டு வருகிறது? தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் என்ன செய்கிறது என்று கேட்டுப் பாருங்கள். செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் தரமணியில் ஒண்டுக்குடித்தனம் நடத்தி வருகிறது. எத்தனை ஆண்டுகள் ஆகிறது செம்மொழி என்று சொல்லி...? அந்தநிறுவனத்திற்கு வளாகச்சுவர் மட்டும் கட்டியுள்ளார்கள் குளோபல் மருத்துவமனை அருகே. (பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் தான்)
இதையெல்லாம் ஞாநி போன்றவர்கள் அரசிடம் எடுத்துச் சொல்லி சரியாக நடத்தி இருந்தால் ஹார்வார்டில் போய் ஏன் நாம் இருக்கை கேட்கப்போகிறோம்?

அமைப்பாக இல்லாமல் உதிரிகளாக நடுநிலைமை பேசுபவர்கள் இப்படித்தான் பேச முடியும். யாராவது எதாவது செய்யும் வரை எதுவும் பேச மாட்டார்கள். ஆரம்பித்ததும் பேசுவார்கள்.
ஹார்வார்டு உண்மையிலேய மெச்சத்தகுந்த பல்கலைக்கழகம் தான். சமஸ்கிருதம் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்துக்கும் அங்கே இருக்கை இருக்கிறதாம். தமிழைத்தவிர. எட்டுகோடி தமிழர்கள் இருக்கும் உலகில் 40 கோடி செலவில் ஒரு சிறிய ஆய்வு இருக்கை அமையப்போகிறது என்பது ஒரு நல்ல விசயம் தானே...?
ஒரு கனடிய பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைய முயற்சி நடந்தது. அது அப்படியே இருக்க இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்கிறார் தோழர் யமுனா ராஜேந்திரன். அங்கேயும் இருக்கட்டும். இங்கேயும் இருக்கட்டும். என்ன போகிறது?
என்னைபொறுத்தவரையில் இந்த இருக்கை அமைய தமிழக அரசும் அரசியல் கட்சிகளும், தமிழ்த்தலைவர்களும் (தமிழினத்தலைவர் கலைஞர்; அய்யா தமிழ்க்குடிதாங்கி; பொங்குதமிழ்ப்போராளி அண்ணன் சீமான், ஈழத்தாய் உட்பட), தமிழ் முதலாளிகளும் பெரிய அளவிலும்
பொதுமக்களும், எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் கலைஞர்கள் யாவரும் தம்மால் முடிந்த அளவும் இந்த முயற்சிக்கு நிதியளித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அந்த நிகழ்வு நடக்கும் போதே நான் யோசித்தேன். உலகின் பெரும் பல்கலைகழகங்கள் அனைத்திலும் தமிழுக்கு இருக்கை அமைக்க வேண்டும். நாம் கண்டுபிடிக்கத்தவறிய தொல்சிறப்புகளை அவர்களாவது வெளிக்கொண்டு வரட்டும்

http://harvardtamilchair.com/