ஒரிசாவில் புயல் அடித்த போது
இவன் கண்கள் கலங்கின.
மும்பையில் குண்டு வெடித்த போது
இவனின் நெஞ்சு வெடித்தது.
குஜராத்தில் பூகம்பம் வந்தது
உணவு உடைகளோடு ஓடினான்
கார்கிலில் சண்டை என்றார்கள்
இங்கே உண்டியல் தூக்கினான்.
இப்போது-
அவன் பிள்ளைகள் சாகின்றன.
அவன் பெண்டுகள் மானம் காக்கவும் வழியற்று மாய்கிறார்கள்
அவன் சகோதரனோ-
பதுங்கு குழிகளையோ புதைகுழிகளையோ வெட்டிக் கொண்டிருக்கிறான்.
அவர்களின் கதறலும் அவர்களுக்கான கதறலும்
வங்காள விரிகுடாவில் கரைகிறது.
சொந்தமென்று அவனை நம்ப வைத்தவர்கள்
சும்மா இருந்தார்கள்
கொஞ்சமாவது சூடு வரட்டும்.
கொஞ்சமாவது சொரணை ஊறட்டும்
என்று-
செத்துச் சொல்லிக் காண்பித்தான் முத்துக்குமரன்.
சூடும் வரவில்லை;
சொரணையும் வரவில்லை;
கவிதைதான் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக