டிசம்பர்
2ம் தேதி தெருவை விட்டுக்கூட
வெளியே வரமுடியாத நிலை. சற்றேரக்குறைய அனைத்து
விஞ்ஞான சாதனங்களும் உபயோகமில்லாமல் இருந்தன. முதல் நாளில் சேமித்திருந்த
நீரனைத்தும் தீர்ந்து போனது. அந்த நாட்களில்
எல்லாம் செவிவழிச் செய்திகளே தொடர்பு சாதனம். அப்படி ஒரு
செய்தியாக சில தெருக்கள் தள்ளி
ஒரு அடிபம்பு இருப்பதாகவும் தண்ணீர் வருவதாகவும் தகவல்.
எல்லோரும் அங்கே போய் வெகு
ஒழுக்கமான வரிசையில் நின்று யாருடனும் எந்த
சண்டையும் இல்லாமல் தண்ணீர் பிடித்து வந்தோம்.
வீட்டில் நல்லெண்ணெய் அகல் விளக்கு வெளிச்சத்தில்
சமையலும் சாப்பாடும். மொத்தத்தில் உயிர் வாழ்வதற்கான அடிப்படைக்
கடமைகள் மட்டுமே அப்போது மனதை ஆக்ரமித்திருந்தது. ஒரு
உயிரின் கடமை அதுதானே. மனிதன்
இன்னமும் அடிப்படையில் உயிர் பிழைத்திருக்கப் போராடும்
உணர்வுள்ள ஒரு விலங்குதான் என்பது
உறுதியானது. அந்த நாட்களில் கேளிப்பட்ட
எந்த தகவல்களும் ஆரோக்யமானதாக இல்லை. வீட்டில் இருப்பதே
உத்தமம் என்றானது அடுத்த தெருவுக்கு கூட போக
முடியாத அளவு அனைத்து புறங்களிலும்
தண்ணீர். அந்த ஏரி உடைந்தது
இந்த ஏரி உடைந்தது என்று
வதந்திகள் வேறு. சில தெருக்கள்
தள்ளித்தான் தங்கையின் வீடு. இரண்டு நாட்களாக
எந்த தொடர்பும் இல்லை. எந்த தெருக்களில்
எவ்வளவு தண்ணீர் என்பதும் தெரியவில்லை.
என்றாலும் வெள்ளத்தின் இரண்டாம் நாள் தங்கையின் வீட்டுக்குப்
போய்ப் பார்த்து விடுவது என்று கிளம்பினேன்.
1977 வருட அமராவதி நதியின் வெள்ளத்தில்
சிக்கித்தவித்த அம்மாவின் கதைகள் எங்களது குடும்பத்தின்
எல்லா கதை நேரங்களிலும் இருக்கும்.
அதெல்லாம் மனதில் ஓட ஒவ்வொரு
தெருவாக கிழக்கு நோஒக்கி நடந்தேன்
(கிழக்கே தான் பள்ளிக்கரணை சதுப்பு
நிலம். அங்கே வழிந்த நீர்தான்
இங்கே வெள்ளம்). முதல் தெருவில் முழங்கால்
அளவு…. இரண்டாம் தெருவில் தொடை அளவு…. அதற்குப்
பின் இடுப்பளவு…. தங்கை இருக்கும் தெருவுக்கு
போகும் போது நெஞ்சளவு வந்து
விட்டது நீச்சலடிக்கவும் ஆயத்தாகத்தான் போனேன். ஆனால் தேவை
ஏற்பட வில்லை. ஒவ்வொரு தெருவிலும்
மாடியில் மட்டுமே ஆட்கள் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். தனியே நடந்தேன். அனைவரும்
கேட்ட கேள்வி எங்கேயிருந்து வரீங்க...
சிலர் கேட்டார்கள் மருந்து கடை திறந்திருக்கா...
காய்கறி எங்கே கிடைக்குது...பால்
கிடைக்குதா... போட் ஏதும் வருதா.......கடைகள் இருக்கா..... பதில்களும்
புன்னகையுமாக ஒரு வழியாக தங்கையின்
வீட்டுக்குப் போனேன். மாடியில் இருந்தார்கள்.
போட்டில் பாலும் சாப்பாடும் வந்ததாம்.
அடுக்ககத்தின் அனைத்து குழந்தைகளும் ஒன்றாக
விளையாடிக் கொண்டிருந்தார்கள்; வெள்ளத்தை
முழுமையாக அனுபவித்தபடி.
ம.
ஜெயப்பிரகாஷ்வேல்
மடிப்பாக்கம்,
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக