வியாழன், 27 ஏப்ரல், 2017

குளிர்காலப் பதிவு

2002 நவம்பர் மாத இறுதியில் பரத் மற்றும் கார்த்திக் அண்ணாவுடன் ஆய்வுப்பணி நிமித்தமாக பல வடமாநிலங்களுக்கும் போகும் வாய்ப்பு கிடைத்தது. இமாச்சல் பிரதேஷ் பலம்பூரில் இருந்து கடுமையான பனிப்பொழிவு மிக்க ரொதாங்பாஸ் வழியாக திரும்பினோம். பெரும்பாலான இடங்களில் கடும் பனி. இருந்தாலும் சமாளித்தோம். பலம்பூர் போகும் போது எதோ ஒரு இடத்தில் இரவு பேருந்து நின்று விட உள்ளூர் மக்களுடன் குளிர் காய்ந்தெல்லாம் பயணித்தோம். அப்போது குளிர் பெரிதாக வாட்டிவிடவில்லை
2003 இறுதியில் வால்பாறையில் வேலைக்குச் சேர்ந்தேன். சராசரியாக காலை நேர வெப்பநிலை 3-5 டிகிரிக்குள் இருக்கும் இடம் அது. ஆய்வகம் இன்னும் தாழ இருந்தது. காலை எட்டரை மணிக்கெல்லாம் உள்ளே இருக்க வேண்டும். ஆறு ஐம்பதுக்கு நீரார் அணைப் பேருந்து வரும். அப்போது கரும்பாலம் அருகில் தங்கியிருந்தோம். பாலாதான் முதலில் எழுந்து கிணற்றில் நீரிறைத்து சுட வைத்து குளித்து விட்டு பிறகு   மற்றவர்களை எழுப்புவார். ஆனால் நானும் சவுமிக்கும் பெரும்பாலும் பேருந்தை பிடிக்க முடியாத படிக்கு தாமதமாகத்தான் சேருவோம். அடுத்த வண்டி ஈட்டியார் வரைதான் போகும். அதைத்தான் பெரும்பாலான நாட்கள் பிடிப்போம். ஈட்டியார் பேருந்து நிறுத்த மலை முகட்டின் மேலிருக்கும் தேநீர்க்கடையில் கடுந்தேநீர் அருந்திவிட்டு இருவரும் நடப்போம். குறைந்தது நான்கு கிலோமீட்டர்கள். அப்போது குளிர் பெரிதாக தெரியவில்லை.
நெருஞ்சி இலக்கிய முற்றம் அப்போது கோவை சிபி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதக்கூட்டம் போடுவார்கள். அங்கேதான் பீ முதலான சில முக்கிய ஆவணப்படங்களைப் பார்க்க வாய்த்தது. ஒரு நாளில் நான் கூட ஒரு கவிதை வாசித்தேன். அந்தக் கூட்டத்தை பெரும்பாலும் தவற விட்டதில்லை. ஆனால் முடித்து விட்டு திரும்பும் போது உக்கடத்தில் இருந்து கடைசிப்பேருந்து தான் இருக்கும். போய்சேர இரவு பனிரெண்டுக்கு சமீபம் ஆகும். அந்தக் குளிரும் பெரிதாக தெரியவில்லை.
ஊருக்குப் போய் திரும்பும் வாரங்களில் ஊமாண்டி முடக்கு அருகே காலை நாலுமணிக்கு தேநீர் குடிக்க பேருந்தை நிறுத்துவார்கள். குளிரையும் சேர்த்தே அனுபவித்து அருந்திய நேரங்கள் அவை.

நேற்று மீண்டெழும் சென்னைக்கான பொங்கல் விழாவினைப் (கண்ணம்மா பேட்டை) பார்த்து விட்டு தோழர் கிருஷ்ணராஜ் அவர்களுடம் திரும்பும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. கோட்டூர்புரம் அண்ணன் துரைமுருகன் வீட்டுக்கு அருகே உள்ள தேநீர்கடையில் கடைசித் தேநீரை அருந்தி பேச்க்கொண்டிருந்து விட்டு கிளம்பும் போது பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. கடுமையான குளிர். கர்சீப் ஹெல்மெட் எல்லாம் தாண்டி குளிர் ஊடுருவ வண்டியை உருட்ட வேண்டியதாயிற்று. உண்மையில் சமாளிக்க முடியாத அளவு குளிர்.ஒருவேளை எல் நினோ / லா நினா காரணமா? அல்லது வயதாகிவிட்டதா................?

கருத்துகள் இல்லை: