ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சிம்மாசனங்களும் கிரீடங்களும் பல

ஒரு முறை என் அப்பவுடன் (2003 என்று நினைவு) சென்னை புத்தகக் காட்சிக்கு போயிருந்தேன். நிறைய நண்பர்கள் சூழ விக்ரமாதித்யன் நின்று பேசிக்கொண்டிருந்தார். கவிஞர் முருகேசன் மாமா மூலமாக சில முறைகள் அவரைப்பார்த்தும் பேசியும் இருக்கிறேன். அவரை முதலில் சந்தித்து பேசியது அகலாத நினைவு. பின்னொரு முறை எழுதுகிறேன். அவரிடம் போய் பெயர் சொன்னவுடம் தெரிந்து கொண்டார். மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தார். பெரும் சிரிப்போடு உடனிருந்தவர்களிடம் "இவன் நம்ம பயடா..." என்று தோளோடு இருத்தி சொன்னார். வேறெந்த படைப்பாளியிடமிருந்தும் இப்படியொரு அணுக்கமான வார்த்தைகளை இன்னமும் கேட்கவில்லை.பின்னர் கடந்து வந்ததும் என் அப்பா சொன்னார். "இவ்வளவு பெரிய ஆளுக்கெல்லாம் உன்னைத்தெரியுதே"..மதுபோதையில் இருந்த ஒரு தாடிக்காரரை அப்பா பெரிய ஆள் என்று சொல்ல ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். என்னை விக்ரமாதித்யன் எதிர் கொண்டதும் அணுக்கமாக பேசியதும் தான். இப்படியாகத்தான் விக்ரமாதித்யன் என்ற கவியையும் கடந்து ஒரு தனி மனிதனாகவும் அண்ணாச்சியை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. அவர் மெல் பெரு மதிப்பும் ப்ரியங்களும் வைத்துள்ளேன்.
அண்ணாச்சிக்கு சாரல் விருது என்று ரொம்ப நாள் முன்பாக அறிந்தேன். விழா விபரங்கள்  பேஸ்புக்கில் இருந்தது. மதியமே அவரிடம் பேசிவிட்டு நேற்று மாலை விழாவுக்குப் போயிருந்தேன். போய் வாழ்த்து சொன்ன போது அவருடன் சுகுமாரன் இருந்தார். கண நேர யோசனையும் இல்லாமல் என்னைப்பற்றியும், படிப்பு, தங்கியிருக்கும் இடம், நெய்தல் மூன்று இதழ்கள் கொண்டு வந்தது (மூன்று இதழ்களிலும் அவர் எழுதினார்; முதல் இதழ் வெளிவர பெரிதும் உதவினார்) நான் தற்போது வேலை பார்க்கு இடம் எல்லாமும் சொன்னார். அதுதான் அண்ணாச்சி. கண்ணிகளை இணைத்துக்கொண்டே போவார். புதுப்புது நட்புகளை அறிமுகம் செய்வார். பார்க்கும் போதும் பேசும் போதும் படிக்க வேண்டிய நூல்களை பரிந்துரைப்பார். என்னை அவர் நினைவு கொள்ள வேண்டிய ஒரு அவசியமும் இல்லை. ஆனாலும் கொஞ்சம் தமிழ் இலக்கியம் படிக்கிறவன் என்பதால் என்னையும் கணக்கில் வைத்திருக்கிறார்.
ஜேடி ஜெர்ரி பாராட்டுக்குரியவர்கள். அண்ணாச்சி உட்பட தகுதியான பலருக்கும் சாரல் விருதளித்துள்ளார்கள்.நன்றிகள் பல- அவர்களுக்கும் அவர்களது அறக்கட்டளைக்கும். ஞானக்கூத்தன், பாலா, நக்கீரன் கோபால், தேணுகா, கரு. பழனியப்பன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் பேசினர். அந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த போதே நான் எழுத யோசித்த பல விஷயங்களையும் பின் மேலும் பலவற்றையும் சுகுமாரன் பேசினார். அவர் பேசப்பேச அண்ணாச்சி குறித்த இந்தப்பேச்சுக்களை ஒரு டாக்குமெண்டரியாக தொகுக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த வீடியோக்களை ஜேடி ஜெர்ரியோ பிறரோ படமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். விக்ரமாதித்யன் குறித்த சுகுமாரன் நக்கீரன் கோபல் கரு பழனியப்பன் இவர்களின் பேச்சுக்கள் பதிவு செய்யப்பட வேண்டியன. யாரவது தகுதி உள்ளவர்கள் உடனடியாக இதைச்செய்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நானே பண்ன வேண்டியிருக்கும்.
நேற்று நானிருந்த மனநிலையில் எழுதியிருந்தால் இன்னும் நேர்த்தியாகவும் விரிவாகவும் இருந்திருக்கும். அவசரகதியில் இதை எழுதுவதால் இப்படியாகிவிட்டது. இரண்டு நிமிடங்களில் தன் ஏற்புரையை முடித்துக்கொண்டார் விக்ரமாதித்யன். கபிலர் முதல் லிபி ஆரண்யா வரையான தமிழ்க்கவிகள் (விக்ரமாதித்யன் சொன்னது) மரபின் முக்கிய ஆளுமையான விக்ரமாதித்யனை புற அடையாளங்களை அளவீடாகக் கொண்டு நம் தமிழ் இலக்கியப்பரப்பு அவரை அளவிட்டுவிட்டதோ என்று தோண்றும் அவ்வப்போது. அணுகுவதற்கு இலகுவான எளிமையும் கிரகிக்க தோதான நேரடித்தன்மையும் சிலாகிக்க வேண்டிய கவித்துவ அழகும் ததும்பும் விக்ரமாதித்யனின் படைப்புக்கள் என்னைப்போன்ற பாமர ரசிகர்களை மட்டுமல்ல விக்ரமாதித்யன் சுகுமாரன் போன்ற கவி ஆளுமைகளையும் ஈர்ப்பதில் வியப்பில்லை.

தமிழ்க்கவிகளே தமிழின் அடையாளம் என்று உரக்க சொன்ன அண்ணாச்சியின் வார்த்தைகளில் இரண்டு கவிதைகள் எழுதியவன் என்ற முறையில் எனக்கும் கொஞ்சம் இருமாப்பு கூட பசியையும் பொருட்படுத்தாமல் ஆயிரம் விளக்கு வரை நடந்து வந்து பேருந்தில் வீடு திரும்பினேன். எனக்கு விருது கிடைத்தால் கூட இப்படியொரு மனநிறைவு இருந்திருக்காது. ராபர்ட் ஆரொக்கியம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இந்த நிகழ்வுக்குப் பின் நெய்தல் மீண்டும் வரும் அபாயம் உள்ளது. அண்ணாச்சி பற்றிய ஒரு டாக்குமெண்டரி செய்யவும் கூடும்.
சிம்மாசனங்களும் கிரீடங்களும் பல; உங்கள் பிருஷ்டமும் சிரசும் பொருந்தினால் சரி -விக்ரமாதித்யன் (வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை)

1 கருத்து:

oshylu சொன்னது…

அறிஞரோடிருத்தல் இனிது.. அதனினும் இனிது அவர்தம் நினைவுகள்