சனி, 24 ஆகஸ்ட், 2013

சந்ததியை நீட்டித்தல்

பரிணாம வளர்ச்சியைப் பற்றி தொழில் நிமித்தமாக அடிக்கடி படித்து வருகிறேன். ரொம்ப காலமாகவே இந்த வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் நானும் ஒரு விலங்குதான் என்று எனக்கு நினைவுக்கு வரும்.  ஆனாலும் மனிதன் தவிர்த்த பிற விலங்குகள் நம்மளவு மூளை வளர்ச்சி அடையவில்லை. அதனால்தான் நாம் சுரண்டல், போட்டி, துரோகம், கருணை இப்படியான சகல மனிதப்பண்புகளோடும் இருக்கிறோம்.
நான் படித்தவரை பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும்- அவை எத்தனை சிறிய-பெரிய அல்லது அறிவு வளர்ந்த அல்லது வளராத உயிரினமாக இருந்தாலும் சரி-அடிப்படையாக சில உந்துதல்கள் அல்லது கடமைகள் உள்ளன.
1.       உடல் வளர்ப்பது (உணவு தேடல் அல்லது உற்பத்தி (உதாரணம்-தாவரங்கள்); உடலை பாதுகாப்பது-இருப்பிடம் பேணல்)
2.       வளர்சிதை மாற்றம் (உடலை வளர்க்க சாப்பிடுவதை செரிப்பது; உடலில் உயிர்மூலக்கூறுகளை உண்டாக்குவது மற்றும் அழிப்பது)
3.       சந்ததியை நீட்டித்தல் (தனது மரபணுக்களை சந்ததிகள் வழி பரப்பி சாகாமல் வைத்திருப்பது)
மேலுள்ள காரணிகள் மூன்றாம் காரணிதான் என்னை பெரிதும் ஈர்த்தது. ஒவ்வொரு உயிரும் மிகவும் பிரயத்தனம் எடுத்து தம் மரபணுக்களை சந்ததி வழி பரப்புகின்றன. இது ஒரு அடிப்படை உந்துதலாகவே நடக்கிறது. மரபணுக்களை கடத்தவே தாம் இந்த செயலை செய்கிறோம் என்று தெரியாமலே அடிப்படையான உந்துதலால் அந்த செயல்கள் செய்யபடுகின்றன. உறவுக்கு பின்னும் நாய்கள் பின்னிக் கொண்டிருப்பது ஆண் நாய்களின் குறி விரைத்து அடைத்துக் கொள்வதுதான் காரணம் என்ற எங்கோ படித்திருக்கிறேன். அப்படியாக இருப்பதன் மூலம் தன் விந்து மட்டும் கருப்பையை அடையவும் பிற நாய்கள் உறவு கொண்டு விந்துப் போட்டியை உருவாக்காமல் தடுக்கவும் செய்கின்றன. வாரிசு அரசியலுக்கெல்லாம் இதுதான் அடிப்படை உந்துதல் என்று நான் நம்புகிறேன். தன் சந்ததி வெற்றிகரமாக நீடித்திருக்க வேண்டும் என்ற அடிப்படை உந்துதலாகக் கூட அது இருக்கலாம். ஆனால் பிரம்மச்சர்யம் மேற்கொள்ளும் சிலர் (சாமியார்கள் உட்பட) அடிப்படை உயிர்ப்ப்பண்பையே விலக்கி வைக்கிறார்கள். அப்படியாக செய்வதன் மூலம் அவர்கள் இயற்கைக்கு மாறான ஒரு காரியத்தையே செய்கிறார்கள்.


சந்ததியை நீட்டித்தல் என்கிற விசயத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கின்றன. மனைவியை குழந்தைப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்ற அதிகாலைத்தகவலோடு கிடைத்த குருவாயூர் எக்ஸ்பிரஸில் பொதுப்பெட்டியில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். கொள்ளிடம் பாலத்தின் மேல் ரயில் போகும்போது ஆண்குழந்தை என்ற தகவல் கிடைத்ததும்  சீரங்கத்தில் இறங்கிவிட்டேன். மிகவும் உணர்ச்சிப்பெருக்கான நிலை. ஆண்களுக்குத்தான் தம் சந்ததியை  நீட்டிப்பதில் பெருவிருப்பம். நானும் விதிவிலக்கல்ல. கண்களில் நீர் வந்து விட்டது. சித்திக்கு போன் போட்டு என் பாட்டனிடம் தகவல் சொல்லுமாறு சொல்லும் போது குரல் உடைந்து அழுகை எட்டிப்பார்த்தது. என்னை விடவும் என் பாட்டனுக்கு இந்த செய்தி பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்றே நம்பினேன். அது உண்மையும் கூட. 

கருத்துகள் இல்லை: