ஞாயிறு, 20 டிசம்பர், 2009

முன் திட்டமிடலோடு புனையப்படும் அலங்காரக்கோவை : பாமரனின் எழுத்துக்கள்

சமீபத்தில் வந்திருக்கும் பேராண்மை படத்தை விமர்சிக்கிறேன் என்ற ரீதியில் முற்போக்குப் போர்வையை போர்த்திக் கொண்டு ஜனநாதன் இனி இதுபோல படம் எடுக்க வேன்டாம் என்று அருளுரை வழங்கி இருக்கும் மதிமாறனைப் (http://mathimaran.wordpress.com/) பற்றி எழுதுகையில் “இப்படியே போனால் மதிமாறன் கோவை பாமரன் (http://pamaran.wordpress.com/) போலாகி விடுவார்” என்று எழுதிவிட்டேன். பாமரன் அப்படியென்ன கீழாகிப் போய் விட்டார் என்று ஒருவர் கேட்டார். மேலே வைத்துப் பேசக்கூடிய அளவுக்கு பாமரனின் எழுத்து ஒன்றும் முக்கியத்துவமானது அல்ல என்ற எனது முந்தைய கருத்தை வலியுறுத்தியே இந்த கட்டுரை.

பாமரன் என்ற பெயரிலான தனிமனிதனை நான் இங்கே விமர்சிக்கப் புகவில்லை. அவரின் சமூகப் பொறுப்புணர்வையோ அரசியல் நடவடிக்கைகளையோ நான் எடை போடவில்லை. அதற்கான அவசியமும் இங்கே இல்லை. ஆனால் பாமரனின் எழுத்தை விமர்சிக்க தமிழில் படிக்கும் வாசகன் என்ற குறைந்த பட்ச தகுதியே போதுமானது. பாமரனின் எழுத்துக்களை அவ்வப்போது வியாபாரத்துக்கென நடத்தப் படும் இதழ்களில் படித்து வந்திருக்கிறேன். அவரின் இணைய பக்கத்தையும் அவ்வப்போது படிப்பதுண்டு. ஒரு பொழுதுபோக்கின் வகையென இதை நான் கொண்டிருந்தாலும், வெளிப்பார்வைக்கு நன்றாக இருக்கிறதேயென்று சேரும் ஊருக்குப் போகாத ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்திருப்பவருக்கு அந்தப் பேருந்து அவருக்கான பயணத்துக்கல்ல என்று சொல்லும் குறைந்த பட்ச சமூகப் பொறுப்புணர்வோடு பாமரனின் எழுத்தைப் பற்றி இந்தச் சிறிய கட்டுரையை எழுதுகிறேன்.

நண்பர் சங்கர் ஒருமுறை சொன்னார். தொடர்ச்சியாக செய்திகளை கவனித்துக் கொண்டு வருபவர்களுக்கு எப்படியும் எதையாவது விமர்சிக்கிற குறைந்த பட்ச அறிவு வளர்ந்து விடும் என்று. உண்மைதான். நிறைய படிக்கவும் டி வி பார்க்க நேரமும் இருக்கிற ஒருவருக்கு பல அபிப்ராயங்கள் தோன்றும். எழுதுவதற்கு கொஞ்சம் மொழியும் கைவந்து விட்டால் அதற்கு நேரமும் கிடைத்து விட்டால் என்னத்தையும் எழுதி விடலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் என்பவன் ஒரு படைப்பாளி என்பவன் தனது எழுத்து அல்லது படைப்பு மூலமாக ஒரு கருத்தை உருவாக்க வேண்டும்; கருத்தை நிறுவ வேண்டும்; கருத்தை ஆராய வேண்டும். இந்த அளவுகோளின் படி பாமரனின் எழுத்து எனது கனக்கில் வரவில்லை.

பாமரனின் எழுத்து ஒரு சாயங்கால நேரத்து நொறுக்குத் தீனீ போல. உப்பு சப்போடு இருப்பதாகத் தோன்றினாலும் உடம்புக்கு ஒன்றும் வலு சேர்க்காது. தேவையில்லாதது. அவரின் மொழிநடை பரவலாக எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அதற்குக் காரணம் அதன் வசீகரத்தொனி. வைரமுத்துவின் மேடையலங்காரப் பேச்சு அதன் உச்சரிப்பால் கேட்பவர்களை வசீகரிக்கிறது. அதைப்போல பாமரனின் எளிய வசீகர நடையில் மயங்கி அதைப் பிடிக்கிறதென்று பலரும் சொல்கிறார்கள். இப்படியாகிவிட்ட பட்சத்தில் அவர் உண்மையாகவே ஒரு நல்ல கருத்தை முன்வைத்தாலும் மொழிநடையினது மாய வசீகரம் அதை மறைத்து விடுகிறது.

நான் சில சிற்றிதழ்களுடன் அறிமுகமானவன். அந்த எளிய இதழ்களிலும் பாமரன் போன்றதொரு தொனியில் எழுதுகிறவர்களது படைப்புகளும் வருவதுண்டு. வாசிப்பனுபவமே இல்லாதவர்கள் கூட அவற்றின் நடை தரும் சுகத்துக்காக படிப்பார்கள். நன்றாக இருக்கிறதென்றும் சொல்வார்கள். அப்புறம் அவர்கள் படித்ததை மறந்து விடுவார்கள். அவருக்கு அந்த எழுத்தின் சாரம் மறந்து போகும். ஆனால் நன்றாக இருக்கிறதென்ற பிம்பம் நிலைத்துப் போகும். அத்தகைய விபத்துதான் பாமரனின் எழுத்துக்கும் நேர்ந்துள்ளது.

ஈழத்தின் நான்காம் கட்டப் போரின்போது பலரும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதினார்கள் . பேசினார்கள். ஆனால் அதிலெல்லாம் ஒரு அவலச்சுவை மேலோங்கி நின்ற காரணத்தால் மக்கள் அனுதாபப் பட்டார்களேயொழிய ஆத்திரப் படவில்லை. திண்டுக்கல் லியோனி பேசினால் மக்கள் ரசிப்பார்கள். கூட்டம் முடிந்த பின்பு என்ன பேசினாரென்று ஒருவருக்கும் நினைவிருக்காது. லியோனி சிரிக்கச்சிரிக்கப் பேசுபவர் என்ற பிம்பம் நிலைத்து விடும். பாமரனுக்கும் இந்த நிலைதான். இதற்காக அவரை நான் புறக்கணிக்கச் சொல்லவில்லை. ஆனால் அதன் பின்னாலுள்ள உண்மையை எல்லோருக்கும் சொல்வது எனது கடமை. பாரதி மேல் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவனை அதற்காகப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அவனின் படைப்பின் மேன்மை தாங்கி நிற்கிறது. பாமரனின் எழுத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை என்கிற விஷ்ணுபுரம் சரவணனின் கருத்தை (http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=5416156027488091983) நான் மதிக்க இதுவே காரணம். இந்த நுண்ணிய தொடர்பிழை பலருக்கும் புரிவதிலை. பாமரனின் எழுத்தை நான் விமர்சித்தால் அதற்கு குதர்க்கமான காரணங்கள் கற்பிப்பதால் பாமரனின் எழுத்தின் தவறுகளை நீங்கள் மறைத்து விடவோ பிழையே இல்லையென்றாக்கி விடவோ முடியாது. அப்படி நினைப்பிருந்தால் அது அறிவீனமே.

பாமரனின் எழுத்துக்களின் பலமாக விஷ்ணுபுரம் சரவணன் சொன்ன இன்னொன்று அரசியல் கட்டுரைகளில் பகடி. பாமரனிடம் நான் காணும் மிகப் பெரும் பலவீணமே அவர் பகடி பன்னுகிற விதம் தான். குஷி கிளம்பிய குழந்தை, செய்ததையே அல்லது சொன்னதையே மீண்டும் மீண்டும் நம் கவனிப்புக்காக சொல்வதை/செய்வதைப் போல, வாசகர்கள் ரசிக்கிறார்களேயென்று பகடியாகவே அதை பண்ணுகிறார். பகடி பன்னுவதற்காக விசயங்களை எடுத்துக் கொள்கிறாரோ என்ற மயக்கமும் எனக்கு உண்டு. இதுபோக, தொடர்பில்லாவிட்டாலும் இங்கே ஒன்றை பதிகிறேன். தமிழில் அரசியல் கட்டுரைகளை நுணுக்கமான அதெசமயம் எளிமையான பகடியுடன் எழுதுபவராக என் கண்ணுக்குப் படுபவர் சாரு நிவேதிதா.


சாரு நிவேதிதா தற்கால இலக்கிய உலகில் மிகவும் எளிமையான அருமையான மொழி நடை உள்ளவர். அவரும் அவ்வப்போது அரசியல் கட்டுரைகள் எழுதுகிறார். அதற்காகவே அவரின் அரசியல் கட்டுரைகள் முக்கியமானவை என்று சொல்லி விட முடியாது. ஒருவித சார்புடனே, சமரசத் தன்மையோடே எழுதுகிறார். கலகக்குரல் போன்றாதான மாயையில் அவரின் அரசியல் சமரசத்தன்மை மறைந்து விடுகிறது. பாமரனின் எழுத்துக்கள் காத்திரமான விசயங்களை சமரசத்தன்மை அற்று பேசுகிறது என்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர் என்கிறார். இதெல்லாம் மட்டுமே ஒரு எழுத்தை நல்ல எழுத்தென்றாக்கி விடாது. அவரின் சமரசமற்றத்தன்மை என்பது வியப்புக்குரியதோ பாராட்டுக்குரியதோ அல்ல. மேலுள்ள வரியை எழுதியால் நான் அவர் சமரசமற்ற எழுத்தைக் கொடுப்பவர் என்று ஒப்புக்கொள்ளவில்லை. வியாபாரமாக்கப் பட்ட இதழ்களில் எழுதுகிறவர்கள் அப்படித்தான் எழுத முடியும். எழுதியாக வேண்டும். இது ஒருவகையில் அந்த இதழ்களின் வியாபார யுக்தி. அவர்களின் எதிர்பார்ப்புக்கு பாமரனின் எழுத்து கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. எனவே அவரின் சமரசமின்மை இயல்பானது அல்ல. அவர் எழுத்துக்களுக்கான பரவலான வரவேற்பினால் நிகழ்ந்த தொடர்விபத்து என்றே நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

முன்னர் சொன்னது போல குறைகள் இல்லாதது எதுவுமே இல்லை. குறைகள் இருக்கிறதென்பதாலேயெ ஒன்றை முற்றாகப் புறக்கணிக்கவும் கூடாது. மனிதர்களை அவர்களின் பலவீனங்களுடனே ஏற்றுக் கொள்பவன் நான். நமது சமூகம் பாசாங்குகளால் நிரம்பியது. ஈழம் என்பவர்கள் இன உணர்வாளர்கள்; குரசோவவைப் பேசுகிறவர்கள் சினிமாக்காரர்கள்; புதிய ஜனநாயகம் என்பவர்கள் புரட்சிக்காரர்கள்; பாப்லோ நெரூடாவென்றால் அவர்கள் முற்போக்குவாதிகள்; பின் நவீனத்துவம் தெரிந்தவர்கள் இலக்கியவாதிகள். இப்படியாக பிம்பங்கள் கட்டமைக்கப்பட்ட தமிழ்ச்சூழலில் யாதொரு கருத்தை முன்வைத்து பொதுவுக்கு வந்தாலும் எதிர்ப்பும் ஆதரவும் சகஜமானதே. அதற்கு பாமரனும் தயாராக இருக்க வேண்டும். நானும் தயராக இருக்க வேண்டும்.

பாமரனின் எழுத்துக்களுக்கு நேர் மாற்றாக நான் முன்வைப்பது புதிய ஜன நாயகத்தின் எழுத்துக்களை. அதன் அரசியல் போக்கோடு எனக்கு சில நெருடல்கள் இருந்தாலும் அந்த எழுத்துக்களின் எளிமைத்தன்மை பூண்ட வீரியத்தை சொல்ல வேண்டும். அதீத எளிமையோடு அசலான தீவிரத்தோடு அவர்கள் உபயோகிக்கிற வார்த்தைகள் ஒரு காத்திரமான எழுத்தை நம் முன் வைக்கின்றன.

கீழுள்ள வரியை எழுதி விட்டதனால் பின்வருபவர்களோடு நான் பாமரனை ஒப்பிடுவதாக தப்பர்த்தம் பண்ணிக் கொள்ள வெண்டாம். தமிழில் முன் திட்டமிடல் இல்லாமல் சுயமாக சரளமான எளிமையான எழுத்தை கைவரப் பெற்றவர்கள் மிகக் குறைவு. பாரதி, புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் மற்றும் விக்கிரமாதித்யன் என்கிற எனது இந்தப் பட்டியல் ரொம்பச்சின்னது. பெருமாள் முருகனின் பட்டியல் இன்னமும் சின்னது. பாரதியும் புதுமைப்பித்தனும் தான்.இறுதியாக, பாமரனின் எழுத்துக்கள் வாசகர்களை கவரும் வண்ணமாக முன் திட்டமிடலோடு புனையப்படும் அலங்காரக்கோவை என்பது என் ஒட்டு மொத்தக் கருத்து.

வியாழன், 17 டிசம்பர், 2009

நான் ரகசியங்களை விற்பவனல்ல

நான் ரகசியங்களை விற்பவனல்ல;
என்றாலும்-
உன் பரிவான சொற்களைக் கொடுத்து
என் ரகசியங்களை வாங்கிக் கொண்டு போகிறாய்.
அல்லது-
உன் பரிவான சொற்களை வேண்டி
என் ரகசியங்களை படையலிடுகிறேன்.

உனது பரிவான சொற்களால்
சிறியதாய் ஒரு தலையணை செய்து
எனக்கேயான உறக்கங்களில்
உடன் வைத்துக் கொள்கிறேன்.

என்னதான் செய்வாய் நீ-
என் ரகசியங்களை?

சாவின் சூட்சுமம்

சாவதற்கு நல்ல வழி
கேட்டவனிடம்-

தூக்க மாத்திரைகள்
நல்ல தேர்வு அல்ல என்று சொல்லி,
மண்ணில் புதையுண்டிருக்கும்
இரும்புக் கத்தியை எடுத்து
துருப்பிடித்த.... மழுங்கின....
அதன் முனையால்
குரல்வளையை அறுத்துக் கொள்;
என வழிமுறை கூறுகிறாய்.

ஒரு வேளை
உயிர் போவதற்கான
ரத்த இழப்பு இல்லாமற் போனாலும்-
விரைவில்,
சீழ் பிடித்து சாவு நேரும்;
என சாவின் சூட்சுமம் சொல்கிறாய்.

கனவில்தானென்றாலும்
இது பெருங்கொடூரமடி ஜோதி.

வாழ்வின் சுவாசம்

பூவுதிர்க்கிற பெருமரங்களையும்

பட்டுப் போக வைக்கும்

வேரடி பூஞ்சையாய் -

நிராசைகளின் பக்கங்களை

புரட்டிக்கொண்டு இருக்கும்

உள்மனம்

வாழ்வின் எளிய தருணங்களையும்

வெறுமையாக்குகிறது.

நிறைந்து போய் விடாத அந்த

வெறுமைகளில் இருக்கிறது

வாழ்வின் சுவாசம்.

சனி, 12 டிசம்பர், 2009

நான் மனிதன் என்று உணர்கிறேன்

சோகம் ததும்புகிற இசைக்காக
கண்கள் தளும்புகிற கணங்களில்
நான் மனிதன் என்று உணர்கிறேன்.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

என்ன கொடுமை சரவணன் இது?

முல்லை பெரியாறு அணை பிரசனை தொடர்பாக போராட்டம் அறிவித்த திமுக மத்திய aமைச்சர் ராசா அலுவலகத்தில் சி பி ஐ விசாரணை நடந்த பின்பு பின்வாங்கியது. ராதாபுரத்தில் பேருண்டு நிலையத்தில் காமராசர் பெயரும் அவர் மாறும் கக்கன் சிலையை நிறுவ கோரி அதிமுக போராடுகிறது. இவர்களின் பொற்கால ஆட்சியில் எத்தனை இடங்களுக்கு காமராசர் பெயரையும் எத்தனை இடங்களில் கக்கன் சிலையும் வைத்தார்கள். ஆனாலும் திமிக செய்வதும் அநியாயம். முத்துவேலர் அஞ்சுகம் பெயர் வைப்பது முன்பு அன்னை சத்யா ஜே ஜெயலிலதா பெயர்களில் போக்குவரத்து கழகம் தொடங்கியது போலாகி விட்டது. பி தி கத்தரி பற்றிய பிரச்சனை எழுந்த வுடன் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அதை மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கும் கருத்து கேட்புக்கும் வைத்தார். இரு மாநிலங்களில் தீராத ஒரு பிரச்சனையில் தன்னிச்சையாக கேரளத்திற்கு சாதகாமா அணை கட்ட ஆய்வு நடத்த ஒப்புதல் வழங்கி உள்ளது எந்த நியாயம்? பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வி ஒன்றை தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என்கிறார்? என்ன கொடுமை சரவணன் இது?
கொஞ்ச நாட்களாக ஜூனியர் விகடன் வாசித்து வருகிறேன். நன்றி நண்பர் முத்துவுக்கு. முற்போக்கு இதழ்கள் என்று சொல்பவைகள் kuda பதிவு செய்யாத அரசு சார்ந்த துறைகளில் நிலவும் தில்லு முல்லுகளை எழுதி வருகிறார்கள். தொடர்ச்சியாக படித்ததில் ஒன்று தெளிவாக புரிந்தது. ஆளும்கட்சி எதிர்கட்சி எதற்கும் மக்கள் நலனில் அக்கறை இல்லை.

திங்கள், 16 நவம்பர், 2009

செம்பனார்கோயில்





செம்பனார்கோயில் நண்பர் முத்தேஜிலனின் சொந்த ஊர். அங்கே போய் இருந்த போது எடுத்த சில படங்கள் இங்கே
அங்கிருந்து திருச்சி வரும் வழியில் தஞ்சை கோவிலின் காட்சி ஒன்றும்

அதிசயம் ஆனால் உண்மை.


அறை நுற்றாண்டு கால போராட்டத்தினால் சாதிக்க முடியாததை கலைன்ஞர் நான்கே நாட்களில் சாதித்து விட்டார்
இடம் திருவரங்கம் திருச்சி

புதன், 14 அக்டோபர், 2009

முதல்வர் அடிக்கும் அவசர கால அரசியல் கூத்து

இன்றைய தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் இன்று முதல் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப் படுவார்கள் என்றும் முதல் கட்டமாக 58000 அல்லது 52000 தமிழர்கள் குடியமர்த்தப் படுவதாகவும் முதல்வர் கருணாநிதி அறிவித்து இருக்கிறார். நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இல் ராஜபக்சே கண்ணிவெடிகளை அகற்றும் வரை மக்கள் முகாம்களை விட்டு அனுப்பப் போவதில்லை எனவும் முகாம்களின் நிலை தரம் உயர்த்தப் படும் என்று தெரிவித்து இருந்தார். தமிழ் எம் பிக்கள் வரும் போது மனக் குறையோடு வந்ததாகவும் திரும்பும் போதே மன நிறைவுடன் திரும்பியதாகவும் ஒரு இலங்கை அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார் . இலங்கை என்ன தமிழ்நாடா? முதல்வர் வழக்கம் போல தன்னிஷ்டப்படி அறிவிப்புகள் செய்கிறார். இந்த பத்து எம் பி களின் நற்சான்றிதல்களை ஐ நா சபையிடம் ராஜபக்சே காண்பிப்பார் என விஜயகாந்த் சொன்னதுதான் நடக்கும் போல தெரிகிறது. உலகத் தமிழ் மாநாடு நடத்த தனக்கு தகுதி இருக்கிறது என்று காட்டிக்கொள்ள முதல்வர் அடிக்கும் இந்த அவசர கால அரசியல் கூத்து மிகவும் வேதனை அளிக்கிறது. திருமாவளவன் மீண்டும் மீண்டும் தன்னையே கேவலப் படுத்திக் கொள்கிறார்.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

சாதியும் சாதி நிமித்தமுமாய்.......

சாதீய மனப்பான்மை வளர்ந்து கொண்டு போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை. வெறும் மனதுக்குள் மட்டும் சாதி இல்லை. பல வடிவங்களில் அது அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. சாதிய அடக்கு முறை என்பது மேல் சாதி இடைசாதியினர் மட்டும் செய்வது இல்லை. பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசிடம் சான்றிதழ் வாங்கியவர்கள் கூட- ஆதிதிராவிடர் பள்ளர் பறையர் முதலானோர் சக்கிலியரை அடக்கி வைக்கிறதை பார்த்து உள்ளேன். சமீபத்தில் பெருமாள் முருகனிடம் பேசியபோதும் இது சம்பந்தமாக பேசியபோது ஒரு தகவல் சொன்னார். பாமா தலித் மக்களின் வாழ்வை பதிவு செய்கிற நாவலில் அல்லது நாவல்களில் அருந்ததியரை அவன் இவன் எனவும் வேறு சாதியினரை மரியாதையாகவும் குறிப்பிட்டுள்ளதாக சொன்னார். கரூர் மாவட்டம் புலியூர் வட்டாரம் மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரம் இந்த இரண்டும் சிறுவயதில் இருந்தே எனக்கு தெரிந்த பகுதிகள். நான் பிறந்து படித்து வளர்ந்த இடங்கள். இங்கே சக்கிலியர்கள் மிகவும் கீழான நிலையில் உள்ளனர். என் கிராமத்தில் நிலம் வைத்து விவசாயம் செய்கிற பள்ளர் இன மக்கள் நிலம் இல்லாத கூலிகளான பறையர் இன மக்களை கீழாக மதிப்பதையும் பார்த்து வளர்ந்துள்ளேன்.

எனது ஊரில் இந்த இரண்டு இன மக்களையும் உறவு முறை சொல்லி அழைத்து பழகினாலும் வீட்டுக்குள் அழைத்து வருவதோ அவர்களும் வர நினைப்பதோ இல்லை. எங்கள் வீட்டு விசேசங்களுக்கு அவர்கள் வருவார்கள். அவர்களது விசேசங்களுக்கு இந்த மக்களும் போவது உண்டு. ஆனால் சாப்பிடுவதில்லை. போகப் போக இந்த கொஞ்ச நஞ்ச வித்யாசமும் மறைந்து விட வேண்டும் என விரும்புகிறேன். பறத் தெரு பள்ளத் தெரு என்று சொன்ன மக்கள் இப்போது ரோஜா நகர் முல்லை நகர் என சொல்கிறார்கள். அரசுப் பதிவுகளிலும் மாறி விட்டது. இதெல்லாம் வரவேற்க வேண்டிய அம்சங்கள்.

எல்லோருக்கும் ஓரளவு பொருளாதார நிறைவு அல்லது சமத்துவம் வரும்போது சாதி என்பது அவசியமாக இருக்காது. அப்போது கண்டிப்பாக சாதி மறக்கப் படும் ஒழிந்து போகும். அந்த அடிப்படையிலேயே பெரியார் தன சமூகப் புரட்சியினை வழிநடத்தினார். சாதியக் கட்டுமானங்களை தகர்க்க அவர் கடவுளை முதலில் தகர்க்க வேண்டி இருந்தது. அதனால் கடவுள் இல்லை என்றார். கடவுளை கட்டிக் காப்பது பார்ப்பன சாதி. எனவே அந்த சாதியை விரோதிகளாக பிரகடப்படுத்தி போராடினார். ஆனால் காலப் போக்கில் பெரியார் எந்த நோக்கத்திற்காக இந்த இரண்டு விசயங்களையும் தொடங்கினாரோ அதை மறந்து விட்டு கடவுள் இல்லை என்பதையும் பார்ப்பானை திட்டுவதையுமே பெரியாரியல் என்று பலரும் நினைக்கிறார்கள். நமது சமுகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை சாதி இருக்கும். இன்று நகரங்களில் வாழும் வசதியான தாழ்த்தப்பட்ட மக்களோடு இடைசாதியினரும் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ பிள்ளைகளின் விருப்பத்தின் பேராலோ திருமண பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலை கிராமங்களில் வர வெகு காலமாகும். எனது கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கடன் வாங்கும் குடியானவர்கள் உண்டு. குடியானர்வளின் நிலங்களை தாழ்த்தப்பட்டோர் வாங்குவதும் நடக்கிறது. மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். ஆனால் மெதுவாக நடக்கும் என்றே படுகிறது. அதுவரை செத்துப் போன பாரதியிடம் வீரம் காட்டாமல் உருப்படியாக ஏதாவது செய்தால் நல்லது நடக்கும்.