சினிமாவை
காட்சி இலக்கியம் என்பதையோ அது பல கலைகளின்
கூடாரம் என்பதையோ நானும் மறுக்கவில்லை. பலகாலமாக
நம்பிக்கொண்டும் இருக்கிறேன். இங்கே நான் சொல்வது
அது அல்ல. சாரு ஒழிவு
திவசத்தே களி பற்றி எழுதும்போது
அது ஒரு சிறுகதையை தழுவி
எடுக்கப்பட்டது. இலக்கிய தொடர்பு இருப்பதாலேயே
அது நல்ல படமாகிறது என்றார்.
மிஷ்கின் பாலு மஹேந்திரா இவர்கள்
தன் உதவியாளர்களை அவர்களின் வாசிப்பு இலக்கிய அறிவு சார்ந்தே
எடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை
இங்கே இலக்கியம் என்று சொல்லப்படுகிற எழுதப்பட்ட
வகைகளுக்கு அப்படி ஒரு புனித
அளவீடு தேவை இல்லை. அற்புதமான
பல படங்கள் உள்ளன. இலக்கியப்புத்தகங்களில்
இருந்து எடுக்கப்படாத பல படங்கள் உள்ளன.
சினிமா எடுப்பவர்கள் மட்டுமல்ல. எல்லா மனிதர்களுக்கும் இலக்கிய
பரிச்சயம் அவசியம் தேவை. ஆனால்
படத்தின் தகுதியை அதன் இலக்கியத்தொடர்போடு
முடிச்சு போடுவது சரியல்ல. இங்கே
பல இலக்கியவாதிகள் பிற கலை அனுபவங்களோடு
, அரசியல் போக்கோடு தொடர்பே இல்லாமல் இருக்கின்றனர்.
இலக்கீயவாதிகளுக்கு பொறுப்பு ஒரு பரந்த தளத்தில்
உள்ளது. அதே பொறுப்பு சினிமாக்காரர்களுக்கும்
உண்டு. நான் சொல்ல வருவது
ஒரு நுண்ணிய வேறுபாடு. இலக்கியத்தின்
தேவை குறித்தல்ல. அதை மட்டுமே ஒரு
அளவீட்டுத்தகுதியாக வைக்கக் கூடாது.
மாற்று
சினிமா லோ பட்ஜெட் சினிமா
டெக்னிகலாக மட்டமாக இருக்கும் என்றும்
இலக்கியத்தொடர்பு உள்ள ஒழிவு திவசத்தே
களி இலக்கியத்தொடர்பாலேயே தொழில்நுட்ப பூர்வமாகவும் கலாபூர்வமாகவும் சிறந்த படமாகிறது என்கிறார்
சாரு. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே
முடியாது. சினிமாவில் நுழைந்து தோற்றுப்போன அல்லது தடம் பதிக்காத
(சினிமாவில்) இலக்கியப்புலிகள் ஏராளம். ஜெயகாந்தன், ஜெயமோகன்,
எஸ்ரா இப்படி. எல்லாரும் எம்.டி. வாசுதேவன் நாயர்
ஆகிவிட முடியாது. பாபாவுக்கும் சண்டைக்கோழிக்கும் வசனம் எழுத எஸ்ரா
எதுக்கு? எஸ் ரா எழுதியதால்
அந்தப் படங்கள் கலையுச்சம் பெற்று
விட்டனவா? மதுபானக் கடை என்ற எளிமையான
படம் கொடுக்கும் அனுபவம் கூட இவர்களால்
தர முடிவதில்லை.
சினிமா ஒரு மிகப்ப்பெரும்
ராட்சச மிருகம். அதனோடு சவாரி செய்ய
இலக்கியம் மட்டுமே போதுமானதல்ல.